சுள்ளுன்னு அடிக்கும் வெயில்.. கரூர் பரமத்தியில் 101 டிகிரி... இன்று ஜில்லுன்னு மழை இருக்காம்
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 2 நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவானது. கரூர் பரமத்தியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து போயினர். ஈரோட்டில் 100.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர், ராமநாதபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளைய தினம் பிப்ரவரி 24 மற்றும்25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 26 முதல் 28ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications