நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா? வங்கக்கடலில் தற்போது சூழ்நிலை எப்படி இருக்கிறது?
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக உருவெடுக்குமா .. வங்கக்கடலில் தற்போது சூழ்நிலை எப்படி நிலவுகிறது என்று பார்க்கலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகர்ந்து வருகிறது. மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கி உள்ளது. அதாவது வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 360 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது.

பொதுவாக புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறு,ம். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
ஆனால் இந்த முறை தாழ்வு மண்டலம் நிலப்பரப்பிற்கு அதிக தூரத்தில் இல்லை. இது வலிமை அடையும் முன் நிலத்தை வேகமாக அடைந்துவிடும். இதனால் இது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக கூட மாற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புயலாக மாறும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. முக்கியமாக நிலப்பகுதிக்கு அருகே வர வர இந்த தாழ்வு மண்டலம் கடுமையான மழையை கொடுக்கலாம். ஆனால் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன .












Click it and Unblock the Notifications