திடீரென கொட்டிய மழை.. சென்னை தாம்பரத்தில் டிராபிஃக்! நத்தை போல ஊர்ந்து சென்ற வாகனங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் புயல் மழை ஓய்ந்திருந்தாலும் இன்னும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று இரவு திடீரென சென்னை தாம்பரத்தில் பெய்த மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுக்கு, வடகிழக்கு பருவமழைதான் போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஃபெஞ்சல் புயல் சேர்ந்து வந்ததால் இயல்பை விட அதிக அளவு மழை பெய்திருக்கிறது. குறிப்பாக கடந்த டிச.1ம் தேதி மட்டும் புயல் கரைகடந்த மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகியவற்றி கடும் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

எனவே மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. விழுப்புரத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டிருந்தது. ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டன.
மழைப்பொழிவை பொறுத்தவரை, டிச.1ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ., புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ., திருக்கனூரில் 43 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ., நேமூரில் 35 செ.மீ., புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ., செம்மேடில் 31 செ.மீ., வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ., விழுப்புரத்தில் 27 செ.மீ., செஞ்சி, கெடாரில் 25 செ.மீ என மழை பதிவாகியிருந்தது.
இதனால் மாநிலத்தின் மொத்த மழைப்பொழிவு 366.6 மி.மீ என்கிற அளவிலிருந்து 20% அதிகரித்து 441 மி.மீ என்கிற அளவுக்கு பெய்திருக்கிறது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் மழை இயல்பை விட அதிகமாகவும், 9 மாவட்டங்களில் மட்டும், மழை இயல்பைவிட குறைவாகவும் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட 88% கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது.
இப்படி இருக்கையில் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இரவு 9-10 வரை சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. தவிர அண்ணாநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் லேசன தூறல் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகள்: 04-12-2024 முதல் 08-12-2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 04-12-2024: லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05-12-2024: தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06-12-2024: தெற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07-12-2024 & 08-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications