மதுரையில் சீறிப் பாயும் வைகை வெள்ளம்.. நடு ஆற்றில் 'மப்பில் மட்டையான' குடிகாரர்கள்..திக் திக்!
மதுரை: மதுரை மாநகரில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரை நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் சீறிப் பாய்வதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் நடுவே சிம்மக்கல் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை உணரமுடியாமல் குடிபோதையில் 2 இளைஞர்கள் படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணியின் மொத்த கொள்ளளவு 71 அடி. தற்போது வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சுமார் 6,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர் பாசன மாவட்டங்கள் பயனடையும்.

வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இருப்பினும் வைகை நதி ஓடும் பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் விரிந்து படர்ந்து கிடப்பது பேராபத்தாகவும் இருந்து வருகிறது. இதனால் மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை நதி ஆழ்வார்புரம், யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் சீறிப் பாய்ந்து நகரத்துக்குள்ளும் ஓடுகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் வைகை நதி கரையில் இடைவிடாமல் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இதனிடையே சிம்மக்கல் பகுதியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதை உணராமல் தூண்களுக்கு அடியில் குடிகாரர்கள் 2 பேர் நிதானம் இழந்த நிலையில் மயங்கி கிடந்தனர். ஆற்றில் வெள்ளம் ஓடிய நிலையிலும் போக்குவரத்து போலீசார் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி மப்பில் உறங்கியவர்களை தட்டி எழுப்பி கைத்தாங்கலாக வெள்ள நீரில் அழைத்து வந்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications