டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. மற்ற ஏரியாவில்? வெதர்மேன் கொடுத்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. திடீரென வெயில் அடித்தாலும், மேகமூட்டத்துடன் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சாத்தூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் வெயில் நிலவுகிறது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 9) முதல் டிசம்பர் 14 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வானிலை அமைப்பு
இந்நிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இந்தத் தாழ்வு நிலை நகரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை (09.12.2025)
மேலும், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும்.
தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மட்டும் இன்றும், நாளையும் வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
கனமழைக்கு வாய்ப்பில்லை
பிற அனைத்து மாவட்ட விவசாயிகளும் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம். பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
வடமாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம்பர் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து பணிகளையும் திட்டமிடலாம் என டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications