நீலகிரியே மழையில் நனையுது.. கோத்தகிரி ஷீலா வீட்டு கூரை பறந்துடுச்சு.. ஊட்டியை புரட்டி எடுக்கும் மழை
ஊட்டி: ஊட்டியே நடுநடுங்கி கொண்டிருக்கிறது குளிரிலும் மழையிலும்.. அடிக்கடி ஏற்படும் மின்தடை, மரம் விழுவது, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களினால் நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையை, கடந்த 4 நாட்களுக்கு முன்பே சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தது. வரும் 1ம் தேதி, இந்த மழை தொடரும் என்றும் எச்சரித்திருந்தது.
ஆனால், நீலகிரியை பொறுத்தவரை, கோடை காலத்திலும் மழை கொட்டியது.. வழக்கமாக மதியம் வரை வெயில் காணப்படும் நிலையில், இந்த முறை அவ்வளவாக வெயில் இல்லை. அடிக்கடி மழையும், குளிரும் மாறி மாறி வீசியதால், நிறைய இடங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகளே, ஏமாற்றமடைந்துவிட்டனர்.
பருவமழை: இப்போது, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓயாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே, வானம் இருண்டு கொண்டிருந்தது.. மதியம் 3 மணிக்கு மேல், ஊட்டி நகரம் முழுக்க கரும்பனி சூழ்ந்துகொண்டதால், ஊட்டியே இருளில் மூழ்கியது.
பிறகு, மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது... இந்த சூறாவளி காற்றுக்கு கோத்தகிரி பகுதியில் நிறைய பாதிப்பு ஏற்பட்டது.. கோத்தகிரி பஸ் ஸ்டாண்டு பகுதியில் இரும்பு குழாய்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த 2 சிக்னல் கம்பங்கள், அப்படியே முறிந்து விழுந்தன. இதில் ஒரு கம்பம் சாலையின் குறுக்கிலும், இன்னொன்று ஆட்டோ ஸ்டேண்ட் பகுதியிலும் விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
மேற்கூரைகள்: கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் அருகே ஷீலா என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது.. அதேபோல கொணவக்கரை கிராமத்தில் உள்ள சில வீடுகளின் மேற்கூரைகளும் சூறாவளியில் பறந்துபோய் விழுந்தன.
குன்னூர் ரோட்டில் எல்லிநள்ளி, கேத்தி பகுதிகளில் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்தன.. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.. குயின்சோலை குடியிருப்பு பகுதியில் நிறைய மரங்கள், வீடுகளை ஒட்டியே உள்ளதால், அவைகள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. ஒருவேளை வீடுகளின் மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே அந்த மரங்களை வெட்டிவிட சொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
ஊட்டியில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிவிடுகிறது.. எனினும் உடனடியாக அவைகளை மின்வாரியம் சரிசெய்துவிடுகிறது என்றாலும், சில பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு கரண்ட் இருப்பதில்லை. பகலிலேயே வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை எரிய விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடும் குளிர்: இப்படி நீலகிரியின் ஒவ்வொரு பகுதிகளிலும் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. திடீரென வெயில் வந்தாலும், அது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் காணாமல் போய், பனிப்படலம் சூழ்ந்துவிடுகிறது.
மழை இல்லாத பகுதிகளில், குளிர் வாட்டி வருகிறது.. சாயங்காலம் 5 மணி ஆகிவிட்டாலே குளிர் துவங்கிவிடுகிறது. காலை 8 மணி வரை இந்த குளிர் நீடித்தபடியே இருக்கிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.. மொத்தத்தில், நீலகிரி மாவட்டமே குளிரில் நடுங்கி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications