வானில் ரெட் தக்காளி.. கூல் ஆக போகுது தமிழ்நாடு! ‘இந்த’ மாவட்டங்கள் தான் டார்கெட்! புரட்டி எடுத்த மழை
சென்னை: ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடங்கி இருப்பது விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில், குறிப்பாக நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை கடுமையான வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய பகுதிகளை வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கடந்ததால் மக்கள் அசௌகரியமாக உணர்ந்தனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மழை பெய்தது. நேர்மாறாக ஜூன் மாதத்தில் மே மாதத்தை விட வெயில் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் காரணமாக ஆகஸ்ட் தொடக்கத்திலேயே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல தேனி, தென்காசி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்" என கூறப்பட்டுள்ளது.
கனமழை: இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் மாங்குடி, வடகரை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி ஆவுடையார் கோயில் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சுற்றுலா தளங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications