“நெருங்கிய சிவப்பு தக்காளிகள்.. சென்னையின் பல பகுதிகளில் இன்று இரவு மழை கொட்டும்”: வெதர்மேன் கணிப்பு
சென்னை: "மழை மேகங்கள் காஞ்சிபுரத்தை கடந்து சென்னை நோக்கி வலுவடைந்து வருகின்றன. சென்னையின் பல பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யும்" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது 24 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலைக்குள் தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது பலத்த காற்று வீசும். ஆகஸ்ட் 19 முதல் 23 வரை, இந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வானகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், மேடவாக்கம், செம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், திருக்கழுங்குன்றம், மாமல்லபுரம், மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு பல பகுதிகளிலும் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மழையைப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெதர்மேன் பிரதீப் ஜான், "மழை மேகங்கள் காஞ்சிபுரத்தை கடந்து சென்னை நோக்கி வலுவடைந்து வருகின்றன. சென்னையின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யும். புயல்கள் நீண்ட தூரம் நீண்டு, பாண்டிச்சேரி மற்றும் கடலூர் வரை கூட சிறிது நேரம் வீசக்கூடும். மழையை அனுபவியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications