வங்கக்கடல் +இந்திய பெருங்கடல் சேர்ந்து செய்த சம்பவம்தான் இது! பெருமழைக்கான காரணத்தை விளக்கிய ரமணன்
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத கனமழைக்கான காரணம் என்ன? என்பது குறித்து சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் விளக்கமளித்துள்ளார்.
வழக்கம் போல நேற்று காலை மழை தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் விட்டுவிடும் என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், நேரம் ஆக ஆக மழையின் அளவு தீவிரமடைந்தது. நேற்றிரவு மழை தனது முழு பலத்தை காட்டியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி என 4 மாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்தது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. ஒரு கட்டத்தில் உபரி நீர் ஊருக்குள் புகுந்தது. பல இடங்களில் ஏரி, குளத்தில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

தூத்துக்குடியில் கடந்த 24 மணி நேரத்தில், காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே திருநெல்வேலியை பொறுத்த அளவில் மூலக்கரைப்பட்டி - 61 செ.மீ, நாங்குநேரி - 33 செ.மீ, மாஞ்சோலை - 55, ஊத்து - 50, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையங்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43செ.மீ, சேரன்மகாதேவி - 41 செ.மீ, கன்னட அணைக்கட்டு - 41 செ.மீ, காக்காச்சி - 36 செ.மீ, நம்பியார் அணை - 36 செ.மீ, பாபநாசம் - 35 செ.மீ, மணிமுத்தாறு - 33 செ.மீ, களக்காடு - 32 செ.மீ, திருநெல்வேலி - 31 செ.மீ, கொடுமுடியாறு அணை - 30 செ.மீ, சேர்வலர் அணை - 27 செ.மீ, ராதாபுரம் - 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததில்லை என இம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிர் பயத்தில் மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து தென் மாவட்டங்களின் சில பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த வரலாறு காணாத மழைக்கான காரணத்தை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் விளக்கியுள்ளார். அதாவது, "பெருமழைக்கு காரணம் வானிலை அமைப்புதான். கிழக்கிலிருந்து ஈரம் மிகுந்த வங்க காற்று தமிழ்நாட்டை நோக்கி வருகிறது, அதேபோல தெற்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தும் ஈரம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வருகிறது. இவை இரண்டும் ஒன்று சேரும்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம், தரைமட்டத்திலிருந்து ஐந்து புள்ளி இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் பலத்த மழை பொழிவை உண்டாக்கியுள்ளது. வங்கக்கடலில் இருந்து வந்த காற்றும் இந்திய பெருங்கடலில் இருந்து வந்த காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதி மேல்நோக்கி எழுந்திருக்கிறது. இப்படி மேலே எழும்புவதற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இதெல்லாம் சேர்த்துதான் கனமழையை கொடுத்திருக்கிறது.
அதிக கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டும்தான் வானிலை ஆய்வு மையத்தால் உறுதி செய்ய முடியும்.. எச்சரிக்க முடியும். ரெட் அலர்ட் என்பது 20 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை. 20 சென்டிமீட்டருக்கு மேலே என்றால் அது 90 சென்டிமீட்டராகவும் இருக்கலாம் 45 சென்டிமீட்டர் ஆகவும் இருக்கலாம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications