"சென்னையில் அடுத்து எப்போது மழை பெய்யும்?" தேதிகளுடன் வெதர்மேன் சொன்ன மேட்டர்.. இது முக்கியம் ஆச்சே
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டுச் சென்றுள்ள நிலையில், சென்னைக்கு அடுத்து எப்போது மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கனமழையால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பல பகுதிகளில் நீர் தேங்கியது.

இப்போது ஓரிரு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரையும் அகற்ற பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை இந்த பெருவெள்ளத்தில் இருந்து இப்போது தான் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
வெதர்மேன்: இதற்கிடையே சென்னையில் அடுத்து எப்போது மழை பெய்யும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இப்போது அரபிக் கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னையில் மழை எனத் தகவல் பரவும் நிலையில், இதை வெதர்மேன் மறுத்துள்ளார். அதேநேரம் அவரது இந்த ட்வீட்டை வைத்துப் பார்க்கும் போது டிச. 19-21 தேதிகள் மழைக்கு வாய்ப்பு என்பதைப் போலவே அவர் பதிவிட்டுள்ளார்.
மழை எங்கே: முன்னதாக எங்கே மழை பெய்யும் என்பதையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில் அவர், "தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகம், உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும். அரேபிக் கடல் பகுதியில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளைப் பாதிக்காது என்பதால் இப்பகுதி மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை: அதேபோல சென்னை வானிலை மையமும் இன்று தனது தினசரி செய்திக்குறிப்பில், ""தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் (டிச. 12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 13, 14 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications