ஆந்திரா பக்கம் போற மாறி போய் சன்டே சென்னைக்கே ரிட்டர்ன் ஆகும் காற்றழுத்தம்! எங்கெல்லாம் மழை?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது எங்கிருக்கிறது என்பது குறித்த தகவலை பார்ப்போம்.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது தொடர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகர்ந்து சென்று பின்னர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பி சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 23 ஆம் தேதி டெல்டா வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று 24 ஆம் தேதி பாக் நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகளின் வழியாக நுழைந்து அரபிக் கடலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வு பகுதி மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் வரும் 23 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
அது போல் டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்து சென்ற பிறகே அரபிக் கடல் பகுதியில் வலுவிழக்கும். இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், "புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20 ம் தேதி) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புரநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் நாளை (டிச.21ம் தேதி) நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயர் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி நாளை மறுநாள் (டிச.22ம் தேதி) சென்னைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் வரும் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 23 ஆம் தேதியிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தீவிர மழை பொழிவை தரும்.
சென்னையில் நேற்று மழையில்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குளிர் காற்றும் வீசி வருவதால், காலையில் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் செல்வோர் குளிரில் நடுங்கியபடியே வாகனங்களை இயக்கி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் , தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மிதமான மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications