"நான் ஸ்டாப் மழை!" அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 19 மாவட்டங்களில் சம்பவம்! வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை காலத்தில் பெரியளவில் மழை இல்லை. வானிலை மையமும் கூட தென்கிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் குறைவான மழையே பெய்ததாகக் கூறியிருந்தது.

ஆனால், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் இருக்கும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
19 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மொத்தம் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 19 மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப திட்டமிடுமாறு கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.21) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: அதேபோல நவ.22ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நவ. 23ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications