"அடுத்த இரண்டு நாட்கள்.." கொங்கு மாவட்டங்களில் விட்டு விளாச போகுது மிக கனமழை.. அலர்ட் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்து இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தாண்டு இதுவரை பெரியளவில் மழை பெய்யாத நிலையில், இப்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பட மாவட்டங்களில் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது.
வானிலை: வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று (08-11-2023), மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது.
இதனால் இன்று நவ. 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
எப்படி இருக்கும்: நாளைய தினம் நவ. 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நவ.11ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். . மேலும், நவ.11 முதல் நவ.14 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது தவிர நவ. 15ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 230 மிமீ மழை பெய்துள்ளது.. அதேபோல பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 150 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 140மிமீ நம்பியூர் (ஈரோடு) 120மிமீ, அவினாசி (திருப்பூர்) 120மிமீ, ஆழியார் (கோயம்புத்தூர்) 110மிமீ, TNAU கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 100மிமீ மழை கொட்டியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை அரபிக்கடல் பகுதிகளில் இன்று நவ.9ஆம் தேதி 09.11.2023: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications