வேளச்சேரி மக்களே ரெடியாகுங்க.. வந்திறங்கிய படகுகள்.. அலர்ட்டாக இருக்கும் காரோட்டிகள்
சென்னை: சென்னைக்கு அதிகனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிக வெள்ளம் பாதிக்கும் பகுதியான வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கடந்த முறை மிஸ் ஆனது போல் ஏமாறிவிடக் கூடாது என்பதற்காக பாலங்களில் கார்களை நிறுத்தி வைத்து வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கவுள்ளது. ஆரம்பத்திலேயே சென்னையை குறி வைத்துள்ள பருவமழையால் அதிகனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை, நாளை மறுநாள் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். அதைத்தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஏமாற்றம் அடைந்ததைதப் போல இந்த முறை சிக்கிக் கொள்ள கூடாது என்பதற்காக கார் உள்ளிட்ட தங்களது உடைமைகளை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேளச்சேரியின் கைவேலி மேம்பாலம் மற்றும் புதிய மேம்பாலங்களின் மீது வாகனங்களை நிறுத்திவைக்க போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் என்றால் ஆயிரத்தோடு போய்விடும், வெள்ளத்தில் சிக்கினால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று அபராதத்தை பொருட்படுத்தாமல் கார்களை மேம்பாலத்தில் இருந்து எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் மண்டல வாரியாக மழை பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து கண்டறியும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக அதிகம் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் வெள்ள பாதிப்பு அதிகளவில் ஏற்படும் பகுதியான வேளச்சேரிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வேளச்சேரி பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், அப்பகுதியில் வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் மீட்கும் வகையில் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications