சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள்.. மீண்டும் ஆரம்பித்த மழை, வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை: சென்னையை கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை ஆரம்பித்துள்ளது. அதேநேரம் முகப்பேர்,அண்ணா நகர் , கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லை.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ம் தேதி ஞாயிறு, டிசம்பர் 5ம் தேதி திங்கள்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து 36 மணி நேரம் அதிகனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

பெரும்பாக்கம் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, பெருங்குடி, காரப்பாக்கம், மணலி, பொன்னேரி, அயனாவரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், கொருக்குப்பேட்டை, ஆர்கே நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மொத்த சென்னையும் மின்சாரம் இல்லாமல் முடங்கியது. இயல்பு நிலை கடந்த வியாழக்கிழமை இரவு தான் பல பகுதிகளில் திரும்பியது. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில ஞாயிறு தான் இயல்பு நிலை திரும்பியது. இன்னும் இயல்பு நிலை திரும்ப முடியாத அளவிற்கு சென்னையின் சில புறநகர் பகுதிகள் உள்ளன. வரதராஜபுரம், முடிச்சூர், பெரும்பாக்கம், மணலியை ஒட்டிய பகுதிகளில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சென்னையில் பெய்த மழை ஓய்ந்துவிட்ட நிலையில், தற்போது மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (11.12.2023) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (12.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே சென்னையை கருமேகங்கள் சூழ்ந்துள்ளது. , வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை ஆரம்பித்துள்ளது. அதேநேரம் முகப்பேர்,அண்ணா நகர் , கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லை. மழை மேகங்கள் அடர்த்தியாக சூழ்ந்துள்ள போதிலும் லேசான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications