வித்தியாசமான குமரி கடல்! ஒன்றுக்கு மேற்பட்ட விசித்திர நிகழ்வுகள்.. அதீத கனமழைக்கு காரணம் என்ன?
சென்னை: புயல் இல்லாமல் வெறும் சுழற்சிகள் ஏன் இத்தகைய மழையை தென் தமிழகத்திற்கு கொடுக்கிறது என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: காயல்பட்டினத்தில் 90 செ.மீ. மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளது. இலங்கை கடற்பகுதி அருகே குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிட்டதட்ட ஒரே இடத்தில் இருந்து வருகிறது. இன்று காலைதான் மேற்கு வடமேற்கு திசையில் நகர்வது போல் தெரிகிறது.

இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தையொட்டிய கடலோர பகுதிகள், தூத்துக்குடி தென் கடலோர பகுதிகளில் அதீத மழை பகல் நேரங்களில் பெய்தது. இந்த சுழற்சி சற்று மேலே செல்லும் போது தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் செல்வதால் திருச்செந்தூர் வரை மழை பெய்தது.
நேற்று மாலை ஆரம்பித்த மழை விடாமல் கிட்டதட்ட 7 அல்லது 8 செ.மீ. வரை பெய்து வருகிறது. இன்று காலை மழையின் தாக்கம் குறைந்துள்ளது. நெல்லை கடற்பகுதிக்கு அப்பால் மீண்டும் மழை மேகங்கள் உருவாகிவருகிறது. இன்றும் இரவு வரை கனமழையை எதிர்பார்க்கலாம். நாளை முதல் மழைக்கான வாய்ப்புகள் குறைந்து வரும்.
ஏனென்றால் இந்த சுழற்சியானது அரபிக் கடல் பகுதிக்கு செல்வது போல் ரேடார் காட்டுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மழை பெய்வது ரேடாரில் தெரியாவிட்டாலும் சுழற்சி அரபிக் கடலில் செல்லும் போது காற்றின் ஈர்ப்பு காரணமாக சில சமயங்களில் விருதுநகர் - கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலடுக்கு சுழற்சியும் கீழடுக்கு சுழற்சியும் வலிமை குறைவு காரணமாக இந்த அளவுக்கு அதீத கனமழையை கொடுக்காது. இந்த அளவுக்கு ஏன் கொட்டி தீர்த்தது என்றால், குமரி கடல் பகுதியானது வித்தியாசமான இடம். ஒக்கி புயலை எடுத்துக் கொண்டால் புயல் உருவாக சாதகமான சூழலே இல்லை என எதிர்பார்த்த நிலையில்தான் திடீரென நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்தம் வலுப்பெற்று கன்னியாகுமரி கடலுக்கு 30 கி.மீ. தொலைவில் புயலாக உருவானது.
முதல் காரணம்: குமரி கடல் பகுதியில் பெரும்பாலும் புயல் உருவாகாது. இதனால் கடந்த கால வரலாறுகள் இல்லை. எனவே வானிலை படிவங்களில் எந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் என்பது குறித்து எதுவும் இல்லை. 30 அல்லது 40 செ.மீ. இருக்கும் என நினைத்த இடங்களில் எல்லாம் 60 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்னொரு காரணம்- கடல் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் மழையின் தன்மையும் அதிகமாகும். கடல் வெப்பம் அதிகமாக இருப்பதால் வருங்காலங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சில மணி நேரங்களில் அதிக மழை பெய்யக் கூடிய சூழல் ஏற்படும் என்கிறார்கள்.
பொதுவாக 20 டிகிரி சென்டிகிரேட்டில் கடல் நீர் வெப்பமாக இருந்தால்தான் புயல் சின்னம் உருவாகும் என பேட்டர்ன் இருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட சுழற்சிகள் இருந்தால் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி என சொல்வோம். தென்மேற்கு பருவமழைக்காலங்களில் வெதர் ரிப்போர்ட்டை பார்த்தால் monsoon trough என சொல்வார்கள். இதுதான் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி.
இது சூரியனின் குத்து கதிர் வடதுருவத்தில் இருக்கும் போது அதன் பின்னால் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மேலே போகும். அதன் பிறகு சூரியனின் குத்து கதிரி தென் துருவத்தை நோக்கி செல்லும் போது அதன் பிறகு 2, 3 மாதங்கள் கழிந்து போகும். வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில் இருக்கிறது. இது வடக்கிலிருந்து தெற்காக பூமத்திய ரேகையை நோக்கி செல்கிறது. அதன் பிறகு தெற்காக தென் துருவம் நோக்கி போகும் போதுதான் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும்.
சுழற்சிகள் எப்போதும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதியில் இருக்கும். சில சமயங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இந்த சுழற்சி மாறும். பல நேரங்களில் சுழற்சியாகவே கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து விடும். நமக்கு மழையை கொடுக்கும் சுழற்சி, இலங்கைக்கு கிழக்கு, தென்கிழக்கிலிருந்து நகர்ந்து வடக்கு சென்று குமரிக் கடல் பகுதியில் இருக்கிறது.
இதனால் இரு விஷயங்கள் நடக்கின்றன. அதாவது அந்த சுழற்சியானது தொடர்ந்து ஈரப்பதத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னொன்று தென் தமிழகத்தை பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கும் கடலோர பகுதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை., இதனால் மலை முகடுகளில் மழை மேகங்கள் அதற்கு மேல் போக முடியாமல் சில சமயங்களில் அதீத மழை பெய்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட விசித்திர நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் போது வரலாறு காணாத மழையாக மாறியது. இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications