பூமிக்கு வரும் பேராபத்து! இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததே இல்லை.. தென் இந்தியாவின் நிலைமையை பாருங்க
டெல்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பம் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
மனிதர்களின் நடவடிக்கையால் உலகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூடாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் கோடைக் காலத்தில் அதீத வெயில், கொட்டி தீர்க்கும் கனமழை எனப் பல பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், இதில் பெரியளவில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

வெப்பம்: இதனால் உலகம் தொடர்ந்து சூடாகிக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு கோடைக் காலம் எந்தளவுக்கு மோசமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும். இதனால் பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட வர முடியாத சூழலே நிலவி வந்தது. இந்தாண்டு இது முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் கோடைக் காலம் மேலும் மேலும் சூடானதாக மாறும் என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையே உலகின் சராசரி வெப்பம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 3ஆம் தேதி புதிய முதல் முறையாக உலகின் சராசரி வெப்பம் 17 டிகிரி செல்சியஸை தாண்டியது. 17 டிகிரி தானே என நினைக்க வேண்டாம். தென் மற்றும் வடக்கு துருவங்களில் வெப்பம் பல டிகிரிகள் மைனஸுக்கு கீழ் இருக்கும். அப்படியிருக்கும் போது சராசரி வெப்பம் 17ஐ தொட்டுள்ளது ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறான கிளைமேட்: கடந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தளவுக்கு வெப்பம் எங்கும் அதிகமானதே இல்லையாம். இப்போது ஏற்பட்டுள்ள எல் நினோ வானிலை நிகழ்வு மற்றும் கரியமில வாயு அதிகரித்து வருவது ஆகியவை தான் வெப்பம் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறதாம். எல் நினோ வலுவடைவதால் வரும் காலங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலே பூமியில் நிலம் மட்டுமின்றி கடலின் வெப்பம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். ஸ்பெயினிலும், ஆசியாவின் பல நாடுகளிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல வட கடல் (North Sea) பகுதியில் கடலில் கூட வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலைகள் ஏற்படுகிறதாம். சீனா, அமெரிக்காவில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.
பூமியின் வெப்பம்: இவை எல்லாம் சேர்த்துத் தான் ஜூலை 3ஆம் தேதி உலகின் சராசரி வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது. அன்றைய தினம் வெப்பம் 17.01 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2016இல் வெப்பம் 16.92 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருந்தது.

அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெப்பம் 17.01ஐ தொட்டுள்ளது. கடந்த 1979 முதல் சாட்டிலைட் மூலம் வெப்பம் கண்காணிக்கப்படும் நிலையில், பதிவு செய்யப்பட்ட உட்சபட்ச வெப்பம் இதுவாகும். இதனால் பூமியின் மிகவும் சூடான நாள் என்று ஜூலை 3ஐ குறிப்பிடுகிறார்கள். வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது மனிதர்களை மட்டுமின்றி உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் ஆபத்தில் தள்ளியுள்ளது.
தென் இந்தியாவில் என்ன நிலை: இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் மே மாதம் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு மே மாதத்தை விட ஜூனில் வெப்பம் உச்சம் தொட்டது. கடந்த ஜூன் மாதம் தென் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் மோசமாக இருந்தது. தென் இந்தியாவில் சராசரி வெப்பம் 34.05°C என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. முன்பு, 2014ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் 33.74 டிகிரி செல்சியஸ் வெப்பமாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications