இன்றே பாலத்துக்கு படையெடுத்த வேளச்சேரி மக்கள்! கார் பார்க்கிங் ஏரியாவான மேம்பாலங்கள்
சென்னை: அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது கார்களை நிறுத்தத் தொடங்கி உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின்போது, ஏராளமான கார்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவில் பெருமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் மழைத் தண்ணீர் சாலையை சூழ்ந்தது.

சென்னை வெள்ளத்தில் எப்போதும் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான வேளச்சேரியில், சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் மிதந்தன. மழைநீர் ஒரு வார காலத்துக்கு வடியாததால் வாகனங்கள் பழுதாகின.
வேளச்சேரி பகுதி மக்கள் சிலர் உஷாராக, மழை வெள்ளத்தில் சிக்கி தங்களது கார்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தில், வரிசையாக தங்களது கார்களை பார்க்கிங் செய்து வைத்திருந்தனர். இதனால் இருபுறமும், மேம்பாலம் முழுக்க வரிசையாக கார்கள் நின்றன.
இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கும் நிலையில், ஆரம்பத்திலேயே சென்னையை குறி வைத்துள்ளது கனமழை. நாளை மிக கனமழை, நாளை மறுநாள் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களும், தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளனர். நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதே, வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையால் கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு மழைநீர் வடியாமல் தேங்கி இருந்ததால் தங்கள் கார்களை பழுது பார்க்க லட்சக்கணக்கில் செலவு செய்த மக்கள் இந்த முறை சுதாரித்துள்ளனர். பாலத்தில் கார்களை பார்க் செய்யவே இடம் கிடைக்காது எனக் கருதி, மழை வெளுக்கப் போவதற்கு 2 நாட்கள் முன்பாக தற்போதே காரை கொண்டு வந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி உள்ளனர். இதனால், வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications