வேளச்சேரியில் இடுப்பளவு தண்ணீர்! குடியிருப்புவாசிகளுக்கு தெய்வமாக தெரியும் பெண்!
சென்னை: சென்னையையே ஒரு புரட்டு புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் வேளச்சேரியில் டான்சி நகரில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும் போதும் ஆவின் பால் விநியோகிக்கும் பெண் ஒருவர் அந்த தண்ணீரில் நீந்தியபடியே பால் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகிறார்.
மிக்ஜாம் புயல் சென்னையை நாசம் செய்துவிட்டு ஆந்திராவில் கரையை கடந்து எங்கேயோ சென்றுவிட்டது. சுமார் 24 மணி நேரம் நடந்த இந்த பேய்க்காற்று, மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவர்கள் இரண்டு நாளாகியும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதிலும் பால் பாக்கெட்டுகள் கிடைப்பது என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அரை லிட்டர் பால் பாக்கெட்டுக்காக இந்த வெள்ள நீரில் நீந்தி சென்று மணிக்கணக்கில் நிற்கிறார்கள்.
அப்படி நின்றாலும் பால் பாக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முடிச்சூரில் ஆவின் பால் பாக்கெட் ஒன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பல இடங்களில் பால் வராததால் கடைகள் மூடப்பட்டுள்ளன. அது போல் பால் முகவர்களும் பால் சப்ளை இல்லை என கைவிரித்து விடுகிறார்கள். இந்த நிலையில் வேளச்சேரி டான்ஸி நகரில் பால் விநியோகம் செய்யும் பெண் ஒருவர் சைக்கிளில் வந்து பால் கொடுத்துவிட்டு செல்கிறார்.
இடுப்பளவு தண்ணீரில் வரும் அந்த பெண் 40 ஆண்டுகளாக பால் விநியோகம் செய்து வருகிறாராம். மழை, வெள்ளத்தை பொருட்படுத்தாமல் சைக்கிளில் பாலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்கிறார். குடியிருப்புவாசிகளும் நீங்கள் செய்யும் இந்த உதவி பெரிய விஷயம் என பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications