100 டிகிரி வெயிலடித்த மாவட்டங்களில்.. அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை! குழப்பியடிக்கும் தமிழக வானிலை
சென்னை: தமிழகத்தில் இன்று பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை வெயில் மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டும் இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில்தான் இந்த வெயில் தீவிரமாக இருக்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது.

பிப்ரவரி இறுதி தொடங்கி மே முதல் வாரம் வரை வெயில் வாட்டி வதைத்துவிட்டது. எப்போதுமே வேலூரில்தான் வெயில் அதிகமாக பதிவாகும். ஆனால் இந்த முறை வேலூரைவிட ஈரோட்டில்தான் + கொங்கு மாவட்டங்களில்தான் வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது.
இப்படி இருக்கையில் மே மாதத்தின் 5-6 தேதிகளில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.
ஆனால் மே இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் மீண்டும் சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி இருந்தது. ஜூன் 1ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது. இந்த ஆண்டின் அதிகபட்சமாக ஜூன் 2ம் தேதி திருவள்ளூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது.
மற்ற வட மாவட்டங்களான வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயில் பதிவாகியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் வெயில் பட்டையை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் 102 டிகிரி, கடலூர், ஈரோட்டில் 101 டிகிரி, மதுரை விமான நிலையம், புதுச்சேரி, திருச்சி, திருத்தணியில் 102 டிகிரி, மதுரை நகரம், நாகை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி என வெயில் கொளுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணியளவில் சுமார் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி,
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
சென்னை
செங்கல்பட்டு
திருவண்ணாமலை
சேலம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
நாமக்கல்
திருச்சி
பெரம்பலூர்
அரியலூர்
திண்டுக்கல்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
சிவகங்கை
உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு 10 மணிவரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications