ஆபிஸ் போறவங்க குடையை மறக்காதீங்க.. சென்னை +3 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேர மழை அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை அதாவது அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இரண்டு பருவங்கள் பரவலான மழையை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கும் இது செப்டம்பர் மாதம் இறுதிவரை நீடிக்கிறது. மறுபுறும், அக.1ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை ஜனவரி வரை நீடிக்கிறது. அந்த வகையில தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாகவே இருந்து வருகிறது.

சென்னையில் மட்டும் மழை இயல்பை விட 28% அதிகமாக பெய்திருக்கிறது. இந்த காலத்தில் 761.9 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 973.2 என்கிற அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 3%, காஞ்சிபுரத்தில் 8%, திருவள்ளூரில் 32% என மழை கூடுதலாக பெய்திருக்கிறது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 36% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியுள்ளது. அதாவது இந்த காலத்தில் 416.3 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஆனால் 564.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இப்படி இருக்கையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த வளிமண்டல சுழற்சியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல இது நகர்ந்திருக்கிறது. எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி காலை 10 மணி வரை அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தவிர இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 20 மற்றும் டிச.21ம் தேதிகளில் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: இன்றும் நாளையும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 20 மற்றும் டிச.21ம் தேதிகளில் ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications