தகவல் தொழில்நுட்ப உலகில் அதிரடி டீல்: ஈஎம்சியை 67 பில்லியன் டாலருக்கு வாங்கும் டெல்!
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல தகவல் சேகரிப்பு நிறுவனமான ஈஎம்சியை (EMC2) மெகா கணிப்பொறி நிறுவனம் டெல் 67 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஈஎம்சி பங்குதாரர்கள், ஒரு பங்குக்கு 33.15 டாலரை பெறுவார்கள். இதில் 24.05 டாலர் ரொக்கமாகவே கிடைக்கும்.
கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலைப் பெறும் பட்சத்தில், உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகமாக இது அமையும்.
டெல் நிறுவன கம்ப்யூட்டர்களுக்கான தேவை சந்தையில் பெருகி வரும் இந்த சூழலில், ஈஎம்சி போன்ற தகவல் சேகரிப்பு நிறுவனம் உடனிருப்பது வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த வர்த்தகத்தில் டெல் ஆர்வம் காட்டியது.
"தகவல் தொழில்நுட்ப சந்தையில் அடுத்த தலைமுறையினருக்கான தேவையை நிறைவேற்ற டெல் - ஈஎம்சி இணைவு தேவைப்படுகிறது," என டெல் நிறுவன அதிபர் மைக்கேல் டெல் தெரிவித்துள்ளார்.
"உண்மைதான்... புதிய சகாப்தத்தில் இப்படி ஒரு புதிய நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு தேவைதான்," என ஈஎம்சி அதிபர் ஜோ டுச்சி கூறியுள்ளார்.
டெல் - ஈஎம்சி புதிய நிறுவனத்துக்கு மைக்கேல் டெல் தலைவர் மற்றும் சிஇஓவாக இருப்பார்.
இந்த வர்த்தகத்தின் உண்மையான மதிப்பு ஈஎம்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஎம்வேர் நிறுவனத்தின் கையில் இருக்கிறது. ஈஎம்சி கைமாறிய பிறகும், விஎம்வேர் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளராகத் திகழும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
வரும் 2016 மே - அக்டோபருக்குள் டெல் - ஈஎம்சி வர்த்தக ஒப்பந்தம் முழுமையடையும் எனத் தெரிகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் டெல் - ஈஎம்சி வர்த்தக ஒப்பந்தம் புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.