ஜெ. மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் கர்நாடகா ஹைகோர்ட்டின் தனி பெஞ்ச் ஜனவரியில்தான் அமையும்?
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரிக்க இருக்கும் சிறப்பு பெஞ்ச் ஜனவரியில்தான் அமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் சிறப்பு பெஞ்ச் அமைத்து நாள்தோறும் விசாரித்து 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் ஜாமீனை 4 மாத காலத்துக்கு நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு நாளை ஒருநாள்தான் வேலைநாள். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி 2-ந் தேதிதான் மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம் திறக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின் நகல் கிடைத்த பின்னர்தான் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிறப்பு பெஞ்ச்சை அமைக்க முடியும். இதனால் இந்த சிறப்பு பெஞ்ச் ஜனவரி மாதம் விசாரணையை தொடங்கி மார்ச் மாதத்தில் முடிக்கும்.
ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க கோரியிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிறப்பு பெஞ்ச்சை அமைக்க உத்தரவிட்டுள்ளதால் அவரது வழக்கறிஞர்களுக்கு தற்போது மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
பொதுவாக பல மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது இத்தகைய கோரிக்கைகளை நீதிமன்றங்கள் நிராகரித்துவிடுவது வழக்கம். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களே இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக வழக்கு ஒரு முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடி ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. அவரது வழக்கறிஞர்களைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா இந்த வழக்கில் இருந்து விடுதலையாகி சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்றே நம்பிக்கையோடு உள்ளனர்.
அதிமுகவைப் பொறுத்தவரை இந்த வழக்கினால் ஜெயலலிதா மீது தமிழகத்தில் அனுதாபம் ஏற்பட்டுள்ளது; அதனால் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்துவிட முடியும் என்று நம்புகிறது.
கர்நாடகா உயர்நீதிமன்றம்தான் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இப்போது அதே கர்நாடகா உயர்நீதிமன்றம்தான் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்கான சிறப்பு பெஞ்ச்சையும் அமைக்க இருக்கிறது. சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்ட உடனேயே மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கி விடும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே தேவையான ஆவணங்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச், ஜெயலலிதாவுக்கான தண்டனையை உறுதி செய்தால் அவர் உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டும். அதே நேரத்தில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள அரசுத் தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதனால் இந்த வழக்கு இன்னும் ஓராண்டு காலம் வரை நீண்டு போகவும் வாய்ப்புள்ளது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் கால நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழலும் உருவாகும். அப்போது என்ன காரணத்தால் விசாரணையை முடிக்கவில்லை என்பதை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து இறுதி முடிவை அறிவிக்கும். எப்படியிருப்பினும் உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கவே செய்யும்.
ஜெயலலிதாவுக்கு தற்போது 4 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் மொத்தம் 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தாம் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வைக்க நீதித்துறையில் நிறையவே பயணிக்க வேண்டியுள்ளது.
ஏனெனில் தீர்ப்பு ரத்தானதால் மட்டுமே ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியும். ஒருவேளை ஜெயலலிதாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் கூட அவர் 7 ஆண்டுகாலம் சட்டசபைக்குள் உள்ளே நுழைய முடியாதுதான்!