ஜெ. அப்பீல் வழக்கு: பவானிசிங்கை மாற்றும் திட்டமே இல்லை - கர்நாடக சட்ட அமைச்சர்
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞரை மாற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது, அவரது பதவிக்காலம் கீழ் கோர்ட்டோடு முடிந்துவிட்ட நிலையில், அவரே பணியில் தொடருவது சரியில்லை என்று கூறி திமுக பொருளாளர் அன்பழகன், கர்நாடக தலைமை நீதிபதிக்கும், கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியிருந்தார். ஹைகோர்ட்டில் ரிட் மனுவும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பவானிசிங்கை அரசு வக்கீல் பதவியில் இருந்து மாற்றிவிட்டு வேறு ஒரு வக்கீலை நியமிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், "அரசு வக்கீலை மாற்றும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்தான் அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக அரசின் அதிகார வரம்புக்குள் இல்லை. அது முற்றிலும் உச்சநீதிமன்றம் சார்ந்த வழக்காகும்" என்றார் அவர்.