பன்றிக்காய்ச்சல் பலி 1,239 ஆக உயர்வு; 2 அதிகாரிகள் டிரான்ஸ்பர்
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், 23 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பதற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்றிக்காய்ச்சல் குறித்த செய்திகள் ஊடகங்கள் வெளியாக காரணமாக இருந்ததாக கூறி இரண்டு அதிகாரிகளை சுகாதாரத்துறை டிரான்ஸ்பர் செய்துள்ளது.
ஹெச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
23,153 பேர் பாதிப்பு
இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று வரை 1,239 பேர் பலியாகி இருக்கிறார்கள். 23,153 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குஜராத்தில் 302 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 302 பேர் பலியாகி உள்ளன. ராஜஸ்தானில் 295 பேரும், மத்திய பிரதேசத்தில் 174 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 178, தெங்லுங்கானாவில் 60, பஞ்சாபில் 47, கர்நாடகாவில் 52, ஹரியானாவில் 25, உத்திர பிரதேசத்தில் 16, ஆந்திராவில் 14, ஹிமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீரில் 10 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியில் இதுவரை 10 பேர் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 200 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெப்பத்திற்கு கிருமிகள் பலி
அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது.நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் டிரான்ஸ்பர்
இதனிடையே, பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாவதால், அதிருப்தியடைந்த டெல்லி சுகாதாரத்துறை இயக்குனரகம், 2 அதிகாரிகளை மாற்றியுள்ளது.
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தாக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் பன்றிக்காய்ச்சல் நோயானது தமிழகத்தில் முழுமையாக கட்டுக்குள் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
319 பேர் பாதிப்பு
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இதுவரை 319 பேர் பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் 183 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுங்க
மேலும், பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதற்கான டாமிபுளு மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்,மற்றும் மருத்துவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முறையாக தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?