அக்னி வெயிலுக்கு 2005 பேர் பலி... இன்னும் 4 நாட்களுக்கு வெயில் கொளுத்துமாம்!
சென்னை: இந்தியாவில் வெயிலின் உக்கிரத்திற்கு இதுவரை 2,005 பேர் பலியாகி உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.
சதமடித்த வெயில்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ஆம்தேதி தொடங்கி மே 29 ம் தேதி (நேற்று) முடிந்தது. ஆனால் கடந்த 2ஆம் தேதியே சென்னையில் வெயில் 100 டிகிரி கொளுத்த தொடங்கி விட்டது.
வீசிய அனல்காற்று
அக்னி நட்சத்திர காலத்தில் 5 நாட்களுக்கு 95 டிகிரியாக வெப்பம் பதிவானது. அதேநேரத்தில் கடந்த 9ஆம் தேதி மீண்டும் வெப்பம் 98 டிகிரி ஆனது. 10 நாட்களுக்கு தணிந்திருந்த வெப்பம் மீண்டும் சூடு பறக்க தொடங்கியது. கடந்த 19ஆம் தேதி 100 டிகிரியை தாண்டியது.
அதிகபட்ச வெப்பநிலை
20ஆம்தேதி முதல் 23ஆம்தேதி வரை 104 டிகிரி வெப்பம் தாக்கியது. 24ஆம்தேதி உச்சகட்டமாக 108 டிகிரி வெயில் வறுத்து எடுத்தது. 25ஆம்தேதியும் அதே வெப்பம் நீடித்தது.
கத்திரி வெயிலின் கடைசி நாளான நேற்று 105 டிகிரி வெயில் தகித்தது. இதேபோல, கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
பாளையங்கோட்டை 101 டிகிரி, கடலூர், மதுரை, வேலூர் 100 புதுச்சேரி, நாகப்பட்டினம் 99, தருமபுரி, திருச்சி 98, கோவை 92 வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2005 பேர் பலி
இதனிடையே வெயிலின் உக்கிரத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி உள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 பேரும், டெல்லியில் 2 பேரும் இறந்துள்ளனர்.
அச்சத்தில் மக்கள்
டெல்லி, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
வெயில் நீடிக்கும்
இன்னும் 4 தினங்களுக்கு அதிக வெப்பம் நீடிக்கலாம். அதன்பிறகு சென்னையில் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.