லிங்கா விவகாரம்... ரஜினி கொடுத்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் சண்டையோ சண்டை!
லிங்கா பட விவகாரத்தில் நஷ்ட ஈடாக ரஜினி மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் ரூ 10 கோடி தந்துவிட்ட பிறகு, பிரச்சினை வேறு ரூட்டில் போக ஆரம்பித்துள்ளது.
ஒரே ஒரு ஆறுதல், ரஜினி தலையை உருட்டுவதை நிறுத்தியிருக்கிறது இந்த கோஷ்டி.
லிங்கா விவகாரத்தை ஆரம்பத்திலேயே தடுத்த நிறுத்தவே ரஜினி விரும்பினார். அதனால்தான் முதலிலேயே கூப்பிட்டுப் பேசவும் சொன்னார்.
ஆனால் போராட்டம், உண்ணாவிரதம், பிச்சையெடுப்பு என்றெல்லாம் பிரச்சினையை நீட்டித்துக் கொண்டே போனதைப் பார்த்த பிறகு அமைதியாக இருந்துவிட்டார் ரஜினி. இந்தப் போராட்டத்தின் உண்மையான காரணம், பின்னணி தானாகவே வெளியில் வரட்டும் என்று நினைத்தார் போலிருக்கிறது.
அதற்கேற்பவே அடுத்து வரும் நாட்களில் நிகழ்வுகள் அரங்கேறின. 'வெறும் நஷ்ட ஈடு அல்ல இவர்கள் நோக்கம், அதுக்கும் மேலே' என ரசிகர்கள் சொன்னதற்கேற்பவே அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின.
இந்த நேரத்தில்தான் பிரச்சினையில் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் "கலைப்புலி' எஸ்.தாணு. சரத் குமாரும் ராக்லைன் வெங்கடேஷிடம் பேசினார்.
ஒருவழியாக ரூ 10 கோடியைத் தர தயாரிப்பாளர் தரப்பில் ஒப்புக் கொண்டார்கள். முழு சுமையையும் ராக்லைன் தலைமையில் சுமத்த விரும்பாத ரஜினி, தன் பங்குக்கு ரூ 5 கோடி கொடுத்ததாகத் தெரிகிறது.
ரூ 10 கோடியையும் இந்த முறை ரஜினி பிரித்துத் தரவில்லை. அதை எப்படியாவது பிரித்துக் கொள்ளட்டும் என மொத்தமாகக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்.
பணத்தைப் பிரிப்பதில் ஏகக் குடுமிபிடிச் சண்டை. இந்தப் பணத்தை என்னிடம் தாருங்கள் நான் பிரித்துத் தருகிறேன், என ஆளாளுக்கு முண்டியடிக்க, அதிலேயே சில தினங்கள் ஓடின.
உடனே மீண்டும் ரஜினி வீட்டு முன் பிச்சைப் போராட்டம் என்றார்கள். அவர்தான் பணம் கொடுத்துவிட்டாரே.. மீண்டும் எதற்கு அவர் பெயரை இழுக்க வேண்டும் என கேட்க யாரும் முன்வரவில்லை. கடைசியில் வேறு வழியின்றி செய்தியாளர்களைக் கூட்டி உண்மையைச் சொன்னார் தாணு. இனி ரஜினிக்கும் இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லிவிட்டார்.
இந்த நிலையிலும், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர் என இரு தரப்பும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என மல்லுக்கட்டலை விட்டபாடில்லை.
"இந்தத் தொகையை ‘எங்களிடம் தரவேண்டும். நாங்களும் விநியோகஸ்தர்களும் பிரித்துக் கொள்வோம்'' என தியேட்டர் தரப்பும், ‘"எங்களிடம் தரவேண்டும். நாங்களும், தியேட்டர்காரர்களும் பிரித்துக் கொள்வோம்'' என விநியோகஸ்தர்களும் சொல்ல...
திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சீரியஸான நிலையில் வடபழனி சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏன் விஷம் குடித்தார் என்று கேட்டதற்கு, லிங்கா தயாரிப்பாளர்களிடம் தங்கள் பங்கை மட்டும் வாங்கிக் கொண்டு சிங்காரவேலன், திருநெல்வேலி ரூபன் ஆகியோர் ஒதுங்கிவிட்டதால், ஏமாற்றத்தில் விஷம் குடித்ததாகக் கூறினர் சக விநியோகஸ்தர்கள்.
ஆனால் இதனை சிங்காரவேலன் தரப்பு மறுத்துள்ளது.
அய்யப்பன் விஷம் குடித்த விவகாரம் லிங்காவுக்காக நஷ்டஈடு வாங்கியவர்களின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்தும் என்கிறார்கள் இத்தனை நாளும் தெருவில் இறங்கிப் போராடிய விநியோகஸ்தர்கள்.
இன்னும் என்னென்ன திருப்பங்களை இதில் பார்க்கப் போகிறோமோ!