கூத்தாண்டவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் பட்டம் வென்றார் மதுரை பிரவீணா
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருநங்கைகள் அழகிப் போட்டியில் மிஸ் கூவாகம் பட்டத்தை மதுரையைச் சேர்ந்த பிரவீணா தட்டிச்சென்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருநங்கைகள் வழிபடும் கோயிலாக உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது.
இதையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அங்கு குவிந்துள்ளனர்.
ஆட்டம் பாட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேடையில் திரைப்பட பாடல்களுக்கு உற்சாகமாக ஆடி திருநங்கைகள் அமர்களப்படுத்தினர்.
மிஸ் கூவாகம் போட்டி
நேற்றிரவு மிஸ் கூவாகம் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். வண்ண வண்ண புடவை அணிந்து ஒய்யாரமாக அவர்கள் பூனை நடை நடந்தனர். இது அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மதுரை திருநங்கை தேர்வு
நளின நடை, அலங்காரம் ஆகியவற்றை கொண்டு அவர்களுக்கு நடுவர்கள் மதிப்பெண் வழங்கினர். இறுதியாக மிஸ் கூவாகம் ஆக மதுரையைச் சேர்ந்த பிரவீணா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கையும், மூன்றாம் இடத்தை மதுரையைச் சேர்ந்த மற்றொரு திருநங்கையான ஹரிணி தட்டிச் சென்றார்.
தாலி கட்டுதல்
திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி இன்றிரவு நடைபெறுகிறது. அரவாணை கணவராக ஏற்று திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வார்கள். பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் புதுமணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்து கொண்டு அழகாய் வலம் வருவார்கள்.
தேரோட்டம் - களப்பலி
புதன்கிழமையன்று தேரோட்டமும் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து விதவை கோலம் பூணும் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். இந்த நிகழ்ச்சியுடன் கூவாகம் திருவிழா முடிவுக்கு வரும். இதன்பின்னர் திருநங்கைகள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். இத்துடன் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா முடிவுக்கு வருகிறது.