இந்தியாவை உற்று பார்க்க வைத்த மோடியின் 'அந்த' இரு போட்டோக்கள்!
ஜெயலலிதா மறைவுக்கு வந்த மோடி கூறிய ஆறுதல் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
சென்னை: ஜெயலலிதா மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மோடியின் இரு போட்டோக்கள் அகில இந்தியாவையும் உற்று பார்க்க வைத்தது.
ராஜாஜிஹாலில் ஜெயலலிதா உடல் அருகே நின்றிருந்த சசிகலா, மோடியை பார்த்ததும் குலுங்கி அழ, அவரது தலையில் தனது இடது கையை வைத்து, மோடி ஆறுதல் கூறிய போட்டோ ஒன்று என்றால், தேம்பிய பன்னீர்செல்வத்தை அரவணைத்து கட்டிபிடித்துக் கொண்டது மற்றொன்று.
இரு போட்டோக்களுமே வேறு வகையான விவாதப்பொருளை உருவாக்கியுள்ளன.
மோடியின் பரிவு
பதவியிலிருந்த ஒரு முதல்வர் இறந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வருகை தந்தது நட்பையும் கடந்த புரோட்டோக்கால் நடைமுறையாகும். எனவே அவர் நடைமுறைப்படி பூங்கொத்தை, ஜெயலலிதாவின் உடல் அருகே வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அதையும் கடந்து குடும்பத்தில் ஒருவரை போல பரிவு காட்டினார் மோடி.
பன்னீர் செல்வம் பிறகுதான்
ஜெயலலிதாவுடனான தனிப்பட்ட நட்பிற்காக மோடி இதை செய்திருப்பார் என்றாலும் கூட, அதற்காக அவர் ஆறுதல் கூற தேர்ந்தெடுத்த நபர் இதில் முக்கியமானவர். ஆம்.. ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் முதல்வராக பதவியேற்ற பன்னீர் செல்வம், தரையில் அமர்ந்திருக்க, அரசு பதவியில் இல்லாத சசிகலாவுக்கு பிரதமர் முதலில் ஆறுதல் கூறினார் என்பது சிலருக்கு கேள்வியாக எழுந்துள்ளது. சசிகலாவின் உறவினர்களையும் தேடி தேடி மோடி ஆறுதல் கூறியது அதில் இன்னொரு பெரும் கேள்வி.
உறவுக்காரர்களையும் தேடிபிடித்தார்
சசிகலா அன்டு கோவுக்கு ஆறுதல் கூறியபிறகே, முதல்வரான பன்னீர்செல்வத்தின் பக்கம் வந்தார் மோடி. சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாத தோழி என்ற வகையில் ஆறுதல் கூறியதாகவே இருந்தாலும், அவரின் உறவுக்காரர்களையும் தேடி தேடி மோடி ஆறுதல் கூறி அந்த இடத்தையே சோகமயமாக்கிவிட்டார்.
தமிழ்நாட்டில் இப்படி
ஆனால், மோடியின் ஆறுதல் சொல்லும் போட்டோ அகில இந்தியாவிலும் வைரலாகியுள்ளது. அதே சமயம், பன்னீர் செல்வத்திற்கு கை கொடுத்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறிய ஆறுதல் போட்டோ தமிழக நெட்டிசன்களிடம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.