சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
கொடைக்கானல்: சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது ஐடித் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேர் அரபு நாட்டில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் கொடைக்கானலுக்கு ஜாலியாக சுற்றுலா செல்ல திட்டமிட்டார்கள்.. காரில் ஒன்றாக பயணித்து சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்றனர். நள்ளிரவில் கார் கூக்கால் அருகே சென்ற போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் கொடைக்கானல். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தென்னிந்தியாவில் ஊட்டிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வரும் மலைவாசல் தலமாக கொடைக்கானல் இருக்கிறது.

இங்கு கோடைக்காலத்திலும் இதமான காலநிலை நிலவும். இதனை அனுபவிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பலர் வருகிறார்கள். பள்ளி ஆண்டு தேர்வு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து சீசன் கொடைக்கானலில் களைகட்டத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதே பலர் கொடைக்கானல் சென்று வருகிறார்கள். அப்படி சென்ற சென்னை நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கொடைக்கானல் சுற்றுலா
சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் ரோடு பச்சையப்பன் தெருவை சேர்ந்த 33 வயதாகும் முகமது ஐடித், அதே பகுதியை சேர்ந்தவர்கள் நோபல் (22), ஹர்ஷத் அலி அகமது (28), முகமது கைப் (23), அப்ரித் (24) மற்றும் திருச்சியை சேர்ந்த ஹிஜாஸ் அகமது (29) ஆகிய 6 பேரும், அரபு நாடுகளில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளார்கள். அங்கு போர் நடந்து வருவதால் நண்பர்கள் 6 பேரும் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தனர்.
கொடைக்கானலுக்கு சென்ற கார்
இந்த நிலையில் நண்பர்கள் 6 பேரும் இந்த விடுமுறையை கொண்டாட சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கொடைக்கானல் நோக்கி வந்தனர். காரை முகமது கைப் ஓட்டினார். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்தடைந்தனர். பின்னர் கொடைக்கானலில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்கால் மலைக்கிராமத்துக்கு சென்று தங்குவதற்கு முடிவு செய்தார்கள். இதைத்தொடர்ந்து நள்ளிரவு கொடைக்கானலில் இருந்து சுக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பூம்பாறையில் என்ன நடந்தது
நள்ளிரவு 2.30 மணி அளவில் கொடைக்கானல் மேல்மலையில் பூம்பாறை அருகே உள்ள பழனி காட்சிமுனை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில் மலைப்பாதையில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த சுமார் 1,000 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்தது
யாருக்குமே கேட்கவில்லை
இதில், கார் பள்ளத்தில் உருண்டு உருக்குலைந்தது. காரில் வந்த வாலிபர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். ஆனால் நள்ளிரவு என்பதால் அவர்களது குரல் யாருக்குமே கேட்கவில்லை இதனால் 6 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். ஆனால் முகமது ஐடித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னைக்கு போன அழைப்பு
இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர், தீயணைப்பு படையினர் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டார். உடனே சென்னையில் உள்ள தீயணைப்பு படையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு படையினர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
1000 அடி பள்ளம்
கார் கவிழ்ந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பள்ளத்தில் இறங்குவதற்கு வழி தெரியாமல் தீயணைப்பு படையினர் தவித்தார்கள். பின்னர் அருகில் உள்ள மகாலட்சுமி கோவில் பகுதியில் இருந்து கயிறு கட்டி 1,000 அடி பள்ளத்தில் இறங்கினர். இதையடுத்து பொழுது விடிந்ததும் காயமடைந்த 5 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு மலைப்பாதைக்கு அழைத்து வந்தார்கள்.
கவனமாக இருக்க வேண்டும்
உயிரிழந்த முகமது ஐடித் உடலை டோலி கட்டி மேலே எடுத்து வந்தனர். தொடர்ந்து காயமடைந்த இளைஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நள்ளிரவில் காரில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்..கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியில் காரை இயக்கும் போது சிறு கவனக்குறையும் சிக்கலை ஏற்படுத்தும்..












Click it and Unblock the Notifications