என்னதான் நடக்கிறது இந்த பச்சிளம் குழந்தையின் உடலில்.. திகைக்க வைக்கும் "தீ"க்குழந்தை!
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்குப் பிறந்த 3வது குழந்தையின் உடலிலும் அவ்வப்போது தீப்பிடித்து வரும் மர்மத்தால் டாக்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது அந்த பச்சிளம் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியருக்கு நர்மதா (3), ராகுல் (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.
முதல் தீக்குழந்தை ராகுல்
இதில், ராகுல் பிறந்த சில தினங்களில் அவனது உடலில் தானாக தீப்பற்றியது. உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ராகுல் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கருணா - ராஜேஸ்வரி தம்பதியினர் குழந்தையோடு சொந்த ஊர் திரும்பினர்.
3வது குழந்தைக்கும் அதே பிரச்சினை
இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி ராஜேஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த சில தினங்களில் அந்த பச்சிளம் குழந்தையின் காலில் திடீரென தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஜெயலலிதாவின் உதவி
இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தீப்பிடிக்கும் குழந்தையின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பச்சிளம் குழந்தையுடன் ராஜேஸ்வரி சென்னை அழைத்து வரப்பட்டார். மேல்சிகிச்சைக்காக ராஜேஸ்வரியின் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
தீவிர சிகிச்சை
குழந்தையுடன் தந்தை கருணா, தாய் ராஜேஸ்வரி, விழுப்புரம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் உஷா சதாசிவன், விழுப்புரம் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஆஷா லதா ஆகியோர் வந்தனர். குழந்தையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மருத்துவர் குழு முற்றுகை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடிக்கும் பச்சிளம் குழந்தையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் குணசேகரன் உடன் இருந்தார்.
சிகிச்சைக்கு சிறப்புக் குழு
தானாக தீப்பிடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தனது 2வது குழந்தைக்கும் இதேபோல பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் ராஜேஸ்வரி பெரும் மன வேதனையில் மூழ்கியுள்ளார். அழுதபடி உள்ளார். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேர கண்காணிப்பு
24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பில் இருக்கும் குழந்தையின் காலில் தீக்காயத்துக்கு கட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை கண்காணித்து வருகிறார்கள்.
காரணம் தெரியவில்லை
ராஜேஸ்வரியின் 2வது குழந்தையான ராகுலுக்கு இதே மருத்துவமனையில் 15 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ராகுல் நலமடைந்தான். தற்போது வரை அவனுக்கு தீக்காயப் பிரச்சினை எழவில்லை. அதேசமயம், அவனது உடலில் என்ன பிரச்சினை, எதனால் தானாக தீப்பிடித்து காயம் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. Spontaneous Human Combustion என்று மட்டும் இதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான பின்புலம் இதுவரை தெரியவில்லை.
மருத்துவர்களுக்கு சவால்
ஆனால் ராகுலின் தம்பிக்கும் அதே போன்ற பிரச்சினை எழுந்துள்ளது மருத்துவ உலகையே குழப்பத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த முறை மருத்துவ உலகினர் இதற்கான சரியான விடையைக் கண்டுபிடிக்க ஆர்வமாகியுள்ளனர். மேலும் இது மருத்துவ உலகுக்கு சவாலாகவும் மாறியுள்ளது.
காயம் குணமாகிறது
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மேற்பார்வையில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கருணாகரன் தலைமையிலன 5 டாக்டர் குழுவினர் குழந்தையின் உடல் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். குழந்தையின் கால் மற்றும் தொடையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து காயங்கள் நன்றாக குணமாகி வருகின்றன.
அதே பிரச்சினை
இதுகுறித்து டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டு இக்குழந்தையின் அண்ணன் ராகுலுக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கொடுக்கப்பட்ட சிகிச்சை முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. குழந்தையின் காலில் காயம் உள்ளது. தொடர்ந்து சிகிச்சை தருவோம். குழந்தையின் தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
மருத்துவமனைக்கு வந்த பின்ன தீக்காயம் ஏற்படவில்லை
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தைக்கு புதிதாக தீக்காயம் ஏற்படவில்லை என்று டாக்டர் குணசேகரன் கூறியுள்ளார்.