தினகரனை விஜயவாடாவுக்கு இழுத்து செல்வதன் பின்னணியில் 'அந்த கண்டெயனர்' தானாம்!
இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கேட்டு,தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி விலை பேசிய வழக்கில் டிடிவி தினகரன் கைதாகி தொடர் விசாரணையில் இருக்கிறார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி பேரம் பேசிய வழக்கில் வசமாக சிக்கிவிட்டார் தினகரன். அவரை ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த இந்திய அரசியலையே அதிரவைத்தது இந்த விவகாரம், இப்போது தினகரனுக்கு இரவும் பகலும் டெல்லி போலீஸுடன்தான்.
டெல்லியில் இருந்து நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட தினகரன், அவரின் இல்லத்தில்,மனைவி அனுராதா முன்னிலையிலேயே விசாரிக்கப்பட்டார். அதனையடுத்து அனுராதாவிடமும் டெல்லி போலீசார் விசாரித்தனர்.
மவுனியாக அனுராதா
'கோடிக்கணக்கான ரூபாய் எப்படி பெறப்பட்டது? அது எங்கிருந்து உங்களுக்கு வந்தது? நாடு முழுவதும் பணக் கட்டுப்பாடு இருக்கும் நிலையில் இவ்வளவு கோடியை எப்படி தினகரன் திரட்டினார்? என்றும் அடுக்கடுக்காக அனுராதாவிடம் டெல்லி போலீசார் கேள்விகள் கேட்டு திணற வைத்துள்ளனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் மவுனம் காத்த அனுராதா தெரியாது என்று கூறியுள்ளார் என்கிறார்கள் போலீசார் தரப்பில்.
கண்டெய்னர் பணம்
மேலும் விஜயவாடாவிலிருந்து கடல் வழியே கண்டெய்னர் மூலமாக பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டது என்றும் அது சென்னை துறைமுகம் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்தே தினகரனை விஜயவாடா கொண்டு சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சிக்கும் அதிமுக புள்ளி
அதாவது ஆர்கே நகர் தேர்தலின் போது கப்பல் மூலம் கன்ட்டெயினரில் பதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் சென்னைத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிறகு காசிமேடு கேட் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர், திருவொற்றியூரில் உள்ள அதிமுக புள்ளியின் யார்டில் பத்திரமாகப் பதுக்கப்பட்டுள்ளது. இது தெரியாத வருமான வரி,புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை துறைமுகத்துக்குள்ளேயே துருவி துருவித் தேடினர். இறுதியில் வெறுப்பான அதிகாரிகள் கொடுத்த தகவலால், ஆர்கே நகர் இடைத் தேர்தலையே ரத்துச் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.
சரக்கு விமானம் மூலம்..
பின்னர்தான் கோடிக்கணக்கான ரூபாய் கட்டுகள் சரக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொச்சிக்கும்,பிறகு அங்கிருந்து வேறொரு சரக்கு விமானம் மூலம் டெல்லிக்கும் கொண்டு செல்லப்பட்டது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்துதான் தினகரன் விஜயவாடா கொண்டு செல்லப்படுகிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.