“மச்சான்.. எந்திரிச்சு வாடா.. கடைசியா ஒரு கோல் அடிடா!” சடலமான தோழனை கோல் அடிக்க வைத்த சக நண்பர்கள்
கொழும்பு: மரணத்தை விட கொடியது எது தெரியுமா? நேற்றோடு நம்முடன் சிரித்துப் பேசி விளையாடிய ஒரு நண்பனை, இன்று சடலப் பேழைக்குள் பார்ப்பதுதான்.
ஆம்... இலங்கையின் முல்லைத்தீவு மண்ணையே இன்று சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முரசுமோட்டை பகுதியில் நடந்த அந்த கோர விபத்து, துடிப்பான கால்பந்தாட்ட வீரரான அந்த ஒரு இளைஞரின் கனவுகளை ஒரே நொடியில் சிதைத்துவிட்டது.

விளையாட்டு என்பது முல்லைத்தீவில் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அதுதான் அவர்களின் உயிர். அதிலும் உயிரிழந்த வாலிபருக்கும் அவரது நண்பர்களுக்கும், கால்பந்து மைதானம் என்பது ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி, வெற்றிகளைப் பகிர்ந்துகொண்ட புனிதமான இடம்.
தன்னுடன் விளையாடிய நண்பன் இனி எழுந்து வரமாட்டான் என்று தெரிந்தும், அந்த நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவனது சக வீரர்கள் செய்த காரியம் இருக்கிறதே... அது பார்ப்பவர் எவரையும் கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.
இறுதி ஊர்வலத்தின் போது, தன் நண்பனின் சடலப் பேழையை சுமந்து கொண்டு அவர்கள் நேராகச் சென்றது இடுகாட்டிற்கு அல்ல... அவர்கள் ஓடித் திரிந்து விளையாடிய அந்த கால்பந்து மைதானத்திற்கு!
அங்கே, கோல் போஸ்ட் அருகே நண்பனின் உடலை வைத்து, ஒரு பந்தை மெதுவாக உருட்டி விட்டு, அந்தப் பேழையாலேயே பந்தை மோதச் செய்து ஒரு 'இறுதிக் கோல்' அடித்தார்கள். அந்த நண்பனே கடைசி முறையாக கோல் அடித்ததை போல அவர்கள் உருவாக்கிய அந்த காட்சி... அங்கிருந்த அனைவரையும் கதறி அழ வைத்தது.
"மச்சான்... எழுந்து வாடா... இன்னொரு கோல் அடிக்கலாம்" என்று அவர்கள் அழுத குரல் அந்த மைதானம் எங்கும் எதிரொலித்தது. தோளோடு தோள் நின்ற நண்பனை, ஒரு பெட்டிக்குள் வைத்து மைதானத்தில் பார்ப்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இந்தக் காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. மரணம் ஒரு மனிதனை பிரிக்கலாம், ஆனால் அந்த ஆன்மாக்களுக்கு இடையே இருந்த நட்பை பிரிக்க முடியாது என்பதற்கு இந்த 'இறுதிக் கோல்' ஒரு சாட்சி.












Click it and Unblock the Notifications