விவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடனை ஒரே தவனையில் செலுத்தி தனது வாக்கை நிறைவேற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.
சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

விவசாயிகளின் கடன் சுமை
இந்தநிலையில், பீகாரைச் சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் கடன் தொகையை நடிகர் அமிதாப் பச்சன் தமது சொந்த வருமானத்தில் இருந்து செலுத்தியுள்ளார்.விவசாயிகளின் கடன் சுமையை ஏற்பதாக அறிவித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை மகள் ஸ்வேதா, மகன் அபிசேக் பச்சன் மூலம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் அமிதாப் திட்டமிட்டுள்ளார்.

சிறிய உதவி தொடரும்
ஏற்கனவே, உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களையும், மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன் வேண்டுகோள்
அதே போல், மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. ஒரு தேசம் ஒரு மக்கள் என்பதை நிரூபிப்பதற்கு இதுதான் சரியான தருணம். சகோதரர்களே முன்னால் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள் என்று தமிழகத்தை கஜா புயல் தாக்கிய போது உருக்கத்துடன் நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications