வறட்சி.. ஆனாலும் விவசாயிகளுக்கு கடன் ரத்து இல்லை-பிரணாப்
டெல்லி: இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்யும் திட்டம் ஏதுமில்லை என அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
பருவமழை பொய்த்துவிட்டாதல் இந்த ஆண்டை வறட்சி ஆண்டாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 9 மாநிலங்களுக்கு இதற்கான நிவாரணப் பணிகளை உடனடியாகத் துவங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மழை இல்லாமல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடத் துவங்கியது.
இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி, நிதித் துறை செயலாளர் அசோக் சாவ்லா உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கடன் ரத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நிச்சயம் கடன்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. பருவமழை குறைந்து விட்டதால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தற்போது கூறுவது கடினம். போகப் போகத்தான் தெரியும்.
மேலும் போன வருடம்தான் விவசாயிகளின் கடன்களான ரூ.71000 கோடியை அரசு முழுமையாக ரத்து செய்தது. வட்டியைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மேலும் கடன்களை ரத்து செய்ய நிதி அமைப்பு இடம்தராது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 6 சதவிகித வளர்ச்சி சாத்தியமே என்றார்.












Click it and Unblock the Notifications