தமிழகத்தில் மேலும் 25 உழவர் சந்தைகள்: வீரபாண்டி ஆறுமுகம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 25 உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று விவசாய மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம்:
இயற்கை பேரழிவு, பூச்சி நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிக்காமல் தடுக்க கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பில் ரூ.265.52 லட்சம் செலவில் தென்னை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் மேலும் 25 உழவர் சந்தைகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். சந்தையின் அமைவிடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
திருச்சி, மோகனூர், ஸ்ரீவைகுண்டம், சின்னமனூர் ஆகிய இடங்களில் வாழையை பழுக்க வைக்கும் மையங்கள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.
செம்மை நெல் சாகுபடியினை 21.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்வதற்கான செயல்விளக்கம் 50 ஆயிரம் இடங்களில் ரூ.15 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பயறு வகைகளில் 2 சத டி.ஏ.பி. கரைசல் தெளிக்கும் திட்டம் 28 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்.
பயறு உற்பத்தியை பெருக்குவதற்கான வரைவு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊடுபயிராக இல்லாமல் துவரையை தனிப்பயிராக பயிரிட ஊக்குவிக்கப்படும்.
2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,650 கிராமங்களில் தரமான விதை கிடைக்க விதை கிராம திட்டம் தொடங்கப்படும்.
வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு 100 ஜீப்புகள் வழங்கப்படும்.
மா, சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.22,500, மானியம் ரூ.30 ஆயிரம் ஆகவும், முந்திரி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம் மானியம் ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சுய உதவி குழுக்களுக்கு மானியத்தில் வழங்கப்படும்..." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதில் சுமார் 51 லட்சம் ஹெக்டேர்தான் சாகுபடிக்கு உள்ளது. நிகர பாசன பரப்பு 68.63 லட்சம் ஹெக்டேர்.
மேட்டூர் அணை நிரம்பி உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால் மட்டுமே 28.63 லட்சம் ஹெக்டேர் பாசனம் சாகுபடி செய்யப்படும். 22.37 லட்சம் ஹெக்டேர் மானாவரி சாகுபடி நிலப்பரப்பு ஆகும்.
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 930 மி.மீ. ஆக உள்ளது. இந்த அளவு மழை பெய்யாவிட்டால் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது..." என்றார்.












Click it and Unblock the Notifications