விவசாயத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்ற நிதி ஆயோக் பரிந்துரை... வேல்முருகன் கண்டனம்!
விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றிவிட வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றிவிட வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்திருப்பது மக்களின் உணர்வுகளையே சாகடிக்கும் முடிவில் இறங்கிவிட்ட மோடியின் மத்திய அரசின் செயலைக் காட்டுவதாக வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் பரிந்துரை பற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : "அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளை மூட வேண்டும்; தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற பேச்சையே தடை செய்ய வேண்டும்" - இவையெல்லாம் ஏற்கனவே நிதி ஆயோக் மத்திய மோடி அரசுக்குச் செய்திருந்த பரிந்துரைகள். இப்போது விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றிவிட வேண்டும் என பரிந்துரைக்கிறது நிதி ஆயோக். இதை நிதி ஆயோக்கின் உறுப்பினரான ரமேஷ்சந்த் என்பவர் கூறியிருக்கிறார்.
நிதி ஆயோக் என்பதே "திட்டக் கமிஷனை" ஒழித்துக்கட்ட மோடி உருவாக்கிய ஒரு ஆயுதம் என்பது வெளிப்படை. அப்படியிருக்க அதன் வாயிலிருந்து இத்தகைய பரிந்துரைகளைத் தவிர உருப்படியாக எதுவும் வராது என்பதுதான் உண்மை.
மோடி தூண்டுதல்
ஏற்கனவே மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி, அவரது பதவிக்கே வேட்டு வைத்துவிடும் அளவுக்கு பிரச்சனைக்குரியதாக மாறியிருக்கிறது. இந்நிலையில் "எதனைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற கணக்கிலேயே நிதி ஆயோக்கிடம் சொல்லி இத்தகைய பரிந்துரைகளைச் செய்யுமாறு கட்டளையிடுக்கிறார் மோடி.
விவசாயத்தை மாற்ற பரிந்துரை
மாநிலங்களுக்கிடையில் நடக்கும் கடிதப் போக்குவரத்து, ஆதாவது அஞ்சல்துறை மத்திய பட்டியலில்தான் உள்ளது. அதைப் போல வேளாண் விளைபொருட்களும் நாடு முழுவதும் போவதால் விவசாயமும் மத்தியப் பட்டியலில்தான் இருக்க வேண்டும் என கவைக்குதவாத ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறது நிதி ஆயோக்.
போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை
விவசாயம் இப்போது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசுதானே நிர்ணயிக்கிறது! அதுதானே விவசாயம் வீழவும் விவசாயிகள் மாளவும் காரணமாயிருக்கிறது! விவசாயிகள் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி மோடிக்கு அருகிலேயே மாதக்கணக்கில் போராடி வருகிறார்களே? கண்டுகொண்டாரா மோடி? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநரை விட்டு சொல்ல வைத்தார்.
மக்களின் உணர்வை சாகடிக்கும் முடிவு
ஆக விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நினைப்பது நன்மைக்காக அல்ல என்பது தெளிவு. மாறாக அது விவசாயத்தை அழிப்பதற்கான சதித்திட்டமேயன்றி வேறல்ல என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குற்றச்சாட்டு. ஆதியில் மனித நாகரிகத்தைத் தொடங்கிவைத்த தொழில் இந்த விவசாயம். இதனை அழிக்க முற்படுவது, மக்களின் உணர்வுகளையே சாகடிக்கும் முடிவில் மோடி அரசு இறங்கிவிட்டதையே காட்டுகிறது.
மோடி அரசு திட்டம்
மாநில உரிமைகளை வரிசையாகப் பறித்து, கூட்டாட்சி முறைக்கே வேட்டு வைக்கும் அதன் பாசிச சர்வாதிகாரப் போக்கையே இது தெளிவாக்குகிறது. விவசாயத்தை அழிப்பதன் மூலம் நாட்டைச் சுலபமாகவே கார்ப்பொரேட்டுகளுக்குக் கைமாற்றிவிட முடியும் என்று மோடி அரசு நினைப்பதும் இதில் அம்பமாகிறது.
எதிர்க்குரல் எழாததேன்?
இப்படி நம்மைப் போல் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் பலவும் நிதி ஆயோக்கின் இந்தப் பரிந்துரையை எதிர்க்கும்போது தமிழக பாஜகவும் முதலமைச்சர் பழனிச்சாமி கட்சியும் மாத்திரம் இதை எதிர்க்காமல் மவுனம் காக்கின்றன. இதில் தமிழக பாஜகவைச் சொல்லிப் பயனில்லை;.ஆனால் தமிழக அரசு சார்பில் பழனிச்சாமியிடமிருந்து எதிர்க்குரல் எழாததேன்?
மோடிக்கு துணை போகிறாரா?
இப்படி அவர் மவுனம் காப்பது மோடி அரசின் சதித்திட்டத்திற்குத் துணைபோவதாகவே அர்த்தமாகிவிடும். எனவே அவர் வாய்திறந்து தமிழக அரசின் எதிர்க்குரலைப் பதிவு செய்ய வேண்டும்.
பரோல் நீட்டிப்பு
அண்மையில் பேரறிவாளனின் நோயுற்ற தந்தையைப் பார்க்க ஒரு மாத காலத்திற்கு அவருக்கு பரோல் வழங்கியது தமிழக அரசு. பேரறிவாளனின் குடும்பத்தினர் உட்பட தமிழகமே அதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழினிச்சாமியைப் பாராட்டியது.
அந்த ஒரு மாதம் கடந்து, பேரறிவாளனின் தந்தை குணமடையாத நிலையில் அவரைக் கவனித்துக் கொள்ள மேலும் ஒரு மாதத்திற்கு அந்த பரோலை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழக அரசு பரோலை நீட்டித்தது.
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்
அதற்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. இப்போது இன்னும் அவரது தந்தை குணமடையாத நிலையில் மேலும் அந்த பரோலை நீட்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வேண்டுகோளை ஏற்று பரோலை மேலும் நீட்டிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.அதே நேரம் கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது சிறையிருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு நிரந்தரமாக அவரை விடுதலை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.