Advertisement

ஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் ரூ.1.5 கோடியாக உயர்வு - சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் ஹேப்பி


டெல்லி : ஜிஎஸ்டி தொகுப்பு சலுகை எனப்படும் காம்போசிஷன் ஸ்கீம் பெறுவதற்கான வரம்பு ரூ.1கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது. ஜிஎஸ்டிவரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு, குறு, நடுத்தர வணிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2017ம் ஆண்டில் ஜூலையில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஆரம்பத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் சற்று குழப்பமான சூழ்நிலையே நிலவி வந்தது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொறுத்தளவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பிறகு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஜிடிபி வளர்ச்சியும் சற்று தொய்வடைந்து 6.3 சதவிகிமாக இருந்தது.

ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றி பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஓரளவு புரிந்துகொண்டதால், உற்பத்தி அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது வேகமெடுக்க தொடங்கியது. உற்பத்தியும் அதிகரித்து விவசாய விளைபொருட்களின் விலையும் குறைந்தது.

5,12,18,28 என நான்கு அடுக்கு வரி விகிதம் அமல்படுத்தப்பட்ட நிலை ஏராளமான பொருட்கள் 12,18 சதவிகித வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 23ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் சிறு, குறு, நடுத்தர வணிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

தமிழக அரசின் கோரிக்கை

அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, வெட் கிரைண்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார்.மேலும், பம்பு செட்டுகள், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், கற்பூரம், காகிதப் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்கு அளிக்குமாறு ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Advertisement
ரூ.40 லட்சமாக உயர்வு

அதே போல இந்த கூட்டத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கான வரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள 20 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இது தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் ஆக குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ரூ. 1.5 கோடியாக உயர்வு

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகை அதாவது காம்போசிஷன் ஸ்கீம் பெறுவதற்கான வரம்பு ரூ.1கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்வதாக கூறினார். ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு உள்ள ஒரு எளிமையான வழி காம்போசிஷன் ஸ்கீம் சிறு வணிகர்கள் குறிப்பிட்ட அளவிலான டர்ன்ஓவர் வரை சிரமமான ஜிஎஸ்டி தாக்கல் முறையிலிருந்து விலக்கு பெற முடியும். இந்த காம்போசிஷன் ஸ்கீம் வரம்பு முன்பு 1 கோடியாக இருந்து வந்தது. அதை 1.5 கோடி ரூபாயாக உயர்த்த உள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள்

சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. சேவைத் துறையினருக்கும் இனி தொகுப்பு சலுகை திட்டம் விரிவாக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதி மாநிலங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி உச்ச வரம்பு, 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது இனிமேல் 20 லட்சமாக உயர்த்தப்படும். 20 லட்சத்துக்கு மேலே வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்

இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள் வரியை காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கேரளாவைப் பொறுத்த அளவில் அதிகபட்சமாக, 1 சதவிகிதம் வரை செஸ் வரி வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

The Goods and Services Tax Council approved a series of measures aimed at benefiting small businesses, such as a doubling of the exemption threshold to Rs 40 lakh and an increase in the turnover limit for service providers looking to avail of the low-compliance composition scheme.
Read more...