நம் எல்லோருக்கும் உள்ள கேள்வி.. பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? ஆனந்த் சீனிவாசன் பதில்
சென்னை: இந்த காலத்தில் பலரும் பங்குச்சந்தை குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், பெரும்பாலானோருக்கு அதில் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் எந்தவொரு ஐடியாவும் இருக்காது. இதனால் தேவையில்லாமல் அகலக்கால் வைத்து மாட்டிக் கொள்வார்கள். பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லாரிடமும் இருக்கிறது. இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
இந்த காலத்தில் நாம் பணத்தை சேமித்தால் மட்டும் போதாது.. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்ந்து வருகிறது. இந்தாண்டு நீங்கள் கையில் வைத்திருக்கும் தொகையின் மதிப்பு அடுத்தாண்டு குறைந்து இருக்கும். அதுதான் பணவீக்கம்.

பணவீக்கத்தை தாண்டி சேமிப்பு:
பணவீக்கத்தை தாண்டி நமது சேமிப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால்.. சரியான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு என்றாலே இங்கே நம்மில் பலரும் பங்குசந்தை தான் நினைவுக்கு வரும். பங்குசந்தை, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டு இருந்தாலும், சிலர் அதில் முதலீடே செய்ய தொடங்கி இருந்தாலும் கூட பலருக்கும் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
பங்குச்சந்தையில் ஒரு அள்ளு அள்ளலாம் என யாரோ சொல்வதை கேட்டு, கையில் இருக்கும் பணம், கடன் வாங்கிய பணம் என எல்லாவற்றையும் போட்டால் பெருத்த நஷ்டத்தையே அது தரும். இதுபோல நம்மை சுற்றியே பலரை பார்த்து இருப்போம். பங்குச்சந்தை குறித்த சரியான புரிதல் இல்லாததே இதற்கு காரணமாகும். மேலும், இதுபோல ஒரு முறை சூடு வாங்கியவர்கள் அதன் பிறகு பங்குசந்தை என்றால் அலறி ஓடுவார்கள்.
பங்குச்சந்தை:
ஆனால், உண்மையில் பணம் சம்பாதிக்க பங்குச்சந்தை மிக சிறந்த ஒரு கருவியாகும். சரியான முறையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இதற்கிடையே பங்குச்சந்தையில் ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்ற நம்மில் பலருக்கும் இருக்கும் சந்தேகத்திற்கு பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
இது தொடர்பான கேள்விக்கு ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பதை பட்டாசு வெடிப்பதை போல நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை பட்டாசு வெடித்துவிட்டால் அது மீண்டும் வராது. அதேபோல ஒரு முறை டீ குடித்துவிட்டால் அதை வாந்தி எல்லாம் எடுக்க முடியாது. போனால் போய்விட்டது அவ்வளவு தான். அதுபோல தான் உங்களுக்கு வேண்டாத பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான பணத்தை நிச்சயம் இதில் முதலீடு செய்யவே கூடாது.
பங்குச்ந்தை என்பது ஒரு உண்டியல் போன்றது. உங்களிடம் இருக்கும் சில்லறையை அதில் போட்டுக் கொண்டே இருங்கள். ஒரே நாளில் பெரிய தொகையை போடவே கூடாது. தங்க முட்டை போடும் வாத்து போல தான்.. ஒரே நாளில் அதை அறுத்திவிடக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாளும் பணத்தை போடுங்கள். ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் முதலீடு செய்யுங்கள். உங்களால் எவ்வளவு தொகை போட முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டார்.
எப்படி கணக்கிடுவது
அதாவது உங்களால் ரூ.1000 முடியும் என்றால் அதை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அந்த இது நஷ்டமாகி ஜீரோவானாலும் கூட கவலை இல்லை என்றால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதை தான் தேவையில்லாத தொகையை மட்டும் முதலீடு செய்யுங்கள் என அவர் குறிப்பிடுகிரார். இந்த தேவையில்லாத தொகையை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
உதாரணமாக ஐடியில் நல்ல சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ரூ.2000 தேவையில்லாத தொகையாக இருக்கும். ஆனால், கூலி வேலை செய்யும் ஒருவருக்கு அது மிக பெரிய தொகையாக இருக்கும். எனவே, உங்களுக்கு எந்த தொகை தேவையில்லாத தொகை என்பதை நீங்கள் தான் கணக்கிட வேண்டும். அதை சரியாக முதலீடு செய்து வந்தால் செல்வத்தை அதிகரிக்க அது உதவும். பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்க நாம் எவ்வளவு நீண்ட காலம் இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதையும் மறக்கக்கூடாது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications