முகேஷ் அம்பானி போட்ட சிறு முதலீடு.. இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது Addverb!
டெல்லி: இந்தியாவின் முன்னணி ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ் (Addverb Technologies), சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை வளர்க்க தயாராகி வருகிறது. தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சிறிய நிறுவனத்திற்கு இந்தியாவில் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.

ஆட்வெர்ப் என்ன செய்கிறது?
பெரிய பெரிய கிடங்குகள் (Warehouses) மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்கள் செய்யும் கடினமான வேலைகளைச் செய்வதற்கு இந்த நிறுவனம் ரோபோக்களை உருவாக்குகிறது.
உதாரணமாக, ஒரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் கிடங்கில் ஆயிரக்கணக்கான பொருட்கள் இருக்கும். அவற்றைச் சரியாகப் பிரிப்பது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தூக்கிச் செல்வது போன்ற வேலைகளை ஆட்வெர்ப் நிறுவனத்தின் ரோபோக்கள் மிகத் துல்லியமாகச் செய்கின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), ஆட்வெர்ப் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 132 மில்லியன் டாலர் முதலீடு செய்து, இந்த நிறுவனத்தின் 54% பங்குகளைக் கைப்பற்றியது. தற்போது இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்களிடம் சுமார் 20% பங்குகள் உள்ளன.
நிதியை எதற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள்?
ஆட்வெர்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சங்கீத் குமார் இது குறித்துக் கூறுகையில், புதிதாக திரட்டப்படும் 100 மில்லியன் டாலர் தொகைய இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காவும், விரிவாக்கத்திற்காகவும் முழுமையாக பயன்படுத்த உள்ளது.
இதில் முதல் முக்கியமான விஷயமாக இருப்பது சர்வதேச விரிவாக்கம், ஏற்கனவே அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்தகாக புதிய தொழில்நுட்பம், மனிதர்களைப் போலவே இயங்கும் ஹியூமனாய்டு ரோபோக்களை (Humanoid Robots) உருவாக்கும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
இவை அனைத்தும் திட்டமிடப்படி நடந்தால் பங்குச்சந்தையில் இறங்கவும் ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ் திட்டமிட்டு உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் பங்குச்சந்தையில் நுழையவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ்-ன் பின்னணி
2016-ம் ஆண்டு 4 இன்ஜினியர்களால் ஒரு சிறிய கிடங்கு தானியங்கி நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. இன்று இது ராணுவம், சுகாதாரம் (Healthcare), மின்னணு உற்பத்தி எனப் பல துறைகளுக்கும் ரோபோக்களைத் தயாரித்து வழங்குகிறது. தொழிற்சாலைகளை ஆட்டோமேட் செய்து வருகிறது. லென்ஸ்கார்ட் (Lenskart), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL) மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் இவர்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
உலக நாடுகளுக்குப் போட்டி
ரோபோட்டிக்ஸ் துறையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது முன்னிலையில் உள்ளன. அவற்றுக்கு இணையாக இந்தியாவிலிருந்து ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தை உருவாக்க முடியும் என சங்கீத் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ரோபோக்கள் உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளை ஆளப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையே ஆட்வெர்ப் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி காட்டுகிறது.












Click it and Unblock the Notifications