முடிவுக்கு வந்த தங்கம் விலை சரிவு.. சர்வதேச மார்க்கெட்டில் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்.. என்ன காரணம்?
வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிந்து வந்தது. இதுவே இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்து வந்தது. இதற்கிடையே கடந்த இரண்டு வாரங்களாகச் சரிந்து வந்த தங்கம் விலை, இப்போது முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் இன்று தங்கம் விலை சட்டென உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. இது இந்தியாவில் எதிரொலிக்குமா என்பதை நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இறங்கி வந்தது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி உச்சம் தொட்ட தங்கம் விலை அதன் பிறகு தொடர்ந்து குறைந்தே வந்தது. அன்றைய தினம் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனையானது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வந்தது. இன்றைய தினம் அது ரூ.70,040க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் நடந்த மாற்றமே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் கடந்த இரு வாரங்களாகத் தங்கம் விலை பெரியளவில் சரிந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் சீராகும் நிலையில், இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைகிறது. இதனால் சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறையும் நிலையில், அதுவே இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்து வந்தது. இந்த வாரம் மட்டும் தங்கம் விலை 1.8% வரை சர்வதேச மார்க்கெட்டில் சரிந்துள்ளது.
முடிவுக்கு வந்த சரிவு
இருப்பினும், இந்த சரிவு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் 0.6% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $3,259.02க்கு விற்பனையாகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ₹8,832க்கு வர்த்தகமாகிறது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 1.4% உயர்ந்து $3,266.90ஆக இருந்தது. அதாவது கோல்ட் ப்யூச்சர்ஸ் ₹8,859க்கு வர்த்தகமாகிறது. இதன் மூலம் இரண்டு வாரங்களாகச் சரிவந்து வந்த தங்கம் விலை, இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
வர்த்தக போர்
அதேநேரம் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் சீராவதால் தங்கம் விலை மீண்டும் வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து சாக்ஸோ வங்கியின் தலைவர் ஓலே ஹேன்சன், "அமெரிக்க சீன வர்த்தக உறவில் முன்னேற்றம் ஏற்படும் வருகிறது. இதனால் வர்த்தகப் பதற்றம் சீராகி வருகிறது. இதனால் தங்கம் மீதான ஆர்வம் குறையலாம். அதேநேரம் இன்னும் சில முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கவும் விரும்புகிறார்கள்" என்றார்.
அமெரிக்கா தங்களுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டி வருவதாகவும் சீனா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் கூறியிருந்தார். ஒருவேளை அதுபோல இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் அது வர்த்தகப் பதற்றத்தைப் பெரியளவில் குறைக்கும். தங்கம் விலை சமீபத்தில் அதிகரிக்க இந்த வர்த்தகப் பதற்றமே காரணமாக இருந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடந்தால் தங்கம் விலை மேலும் குறையும்.
என்ன காரணம்
அது சரி இன்று ஏன் தங்கம் விலை சர்வதேச மார்க்கெட்டில் அதிகரித்தது என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த முக்கியமான டேட்டா இன்று வெளியாகிறது. அங்குக் கடந்த மாதம் 2.28 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருந்த நிலையில், இந்த மாதம் அது 1.30 லட்சமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படிக் குறைந்தால் அது தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கும். இதை எதிர்பார்த்தே அங்குத் தங்கம் விலை உயர ஆரம்பித்துவிட்டது.
இந்தியாவில் என்னவாகும்
அதேநேரம் டேட்டா வந்த பிறகு தான் நிலைமை தெளிவாகத் தெரியும். குறைந்த வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகி இருந்தால், அமெரிக்காவில் தங்கம் விலை மேலும் உயரும். அது இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கும். அதேநேரம் எதிர்பார்த்த அளவு வேலைவாய்ப்பு உருவானால், அங்கும் தங்கம் விலை குறையும். இந்தியாவிலும் குறையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications