6 அமைச்சர், 10 வாரிய தலைவர்.. அதிமுக எம்எல்ஏக்களிடம் தவெக பேரம்.. எடப்பாடி பழனிசாமி ஷாக்!
சென்னை: அதிமுகவில் 6 பேருக்கு அமைச்சர் பதவி, 10 வாரியத் தலைவர் பதவி தருவதாக பேரம் பேசி தவெக ஆசை காட்டி இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தவெக அரசை எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரித்து துரோகம் இழைத்துள்ளது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பதவிக்காகவே எஸ்பி வேலுமணி தவெகவை ஆதரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்ப் நடைபெற்றது. இதில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்று தவெக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதில் அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் சாய்ந்துவிட்டனர். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதும் நிரூபணமாகி இருக்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மின்னஞ்சல், தபால், எஸ்எம்எஸ் ஆகியவை மூலமாக அனைத்து அதிமுக எம்எல்ஏ-க்களும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் அதிமுகவுக்கு துரோகம் இழைக்கும் விதமாக அறிவிப்பை வெளியிட்டார்கள். அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கொறடா மூலமாக உத்தரவிடப்பட்டது.
ஆனால் கொறடா உத்தரவை மீறி இருக்கின்றனர். தவெகவினர் சில பேருக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 6 பேருக்கு அமைச்சர் பதவி, 10 வாரியத் தலைவர் பதவி கொடுப்பதாக தவெக கூறி இருக்கிறது. இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். அதிமுகவின் சாதனைகளை கூறிதான் வாக்கு சேகரித்து வெற்றி பெற்றனர்.
அப்படி வெற்றி பெற்ற கட்சியான அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருக்காமல் துரோகம் இழைத்தவர்கள் இவர்கள்.. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பான ஒன்றுதான். திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. தற்போது தவெக வென்றிருக்கிறது. இந்த சூழலிலும் கூட அதிமுக 47 இடங்களில் வென்றுள்ளன.
ஆனால் சில அதிமுக எம்எல்ஏ-க்கள் அமைச்சராக வேண்டும் என்ற நோக்குடன், பலரை தவறான பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர். விஜய் தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்றார். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.. அப்படி கருத்து வேறுபாடு நிலவும் போது, ஒரு தரப்பை மட்டும் நேரில் சந்திப்பது சரியா? எந்த இயக்கத்திற்கு இப்படி சோதனைகள் வரலாம்.
தமிழ்நாட்டில் இதுவரை எந்த தலைவரும் பிரிந்த இயக்கத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு சென்றது கிடையாது. இப்படி நடப்பது முதல்முறை.. தொடக்கத்திலேயே விஜய் தவறான பாதையில் செல்வது வருத்தம் அளிக்கிறது. கொறடாவின் உத்தரவை மீறி அதிமுகவினர் வாக்களித்துள்ளனர். இதன் மூலமாக குதிரை பேரம் நடந்திருப்பது உண்மையாகிறது.
திமுக - அதிமுக இடையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. திமுக எதிர்ப்பில் தான் அதிமுக தோன்றியது. தவெகவுக்கு ஆதரவாக செல்ல அவர்களுக்கு வேறு காரணம் கிடைக்கவில்லை. தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் சிவி சண்முகம் உள்ளிட்டோர் பேசுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications