"தவெகவை ஆதரிப்பது ஏன்?" வன்னியரசு சொன்ன முக்கியமான பதில்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் விசிக?
சென்னை: தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக நிலவி வந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக விசிக அறிவித்துள்ளது. இதற்கிடையே தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது ஏன்.. ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கு வகிக்குமா என்பது தொடர்பாக விசிக எம்எல்ஏ வன்னியரசு சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த திங்கள்கிழமையே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் கூட, புதிய அரசு அமைவதில் சிக்கல் இருந்தது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான நம்பர் இல்லை. அந்த நம்பரை திரட்டும் பணிகளில் தவெக இறங்கியது.

வன்னியரசு
முதலில் காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், பிறகு இடதுசாரிகள் ஆதரவு கொடுத்தது. இருப்பினும், இரு இடங்கள் குறைவாக இருந்தது. இதனால் விசிக எடுக்கும் நிலைப்பாடு கூர்ந்து கவனிக்கப்படும் விஷயமாக மாறியது. இந்தச் சூழலில் தான் தவெகவுக்கு ஆதரவு தருவதாக விசிக இன்று அறிவித்தது. அவர்களைத் தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சியும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதற்கிடையே விசிக முடிவு தொடர்பாக அக்கட்சியின் எம்எல்ஏ வன்னியரசு சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சன் டிவிக்கு விசிகவின் வன்னியரசு அளித்த பேட்டியில், "இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த நிலைப்பாட்டைத் தான் நாங்கள் எடுப்போம் என்று எங்கள் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்தது. அதன்படியே நாங்களும் எங்கள் முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.
திமுக- விசிக கூட்டணி என்னவாகும்?
தோழமை கட்சிகள் முடிவை மதிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக தொடர்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம். இப்போது நாங்கள் எடுத்துள்ள முடிவு அறம் சார்ந்தது. ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இப்போதைய ஆளுநர் அரசியலமைப்புக்கு எதிராக அரசியலமைப்பை அழிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபை தானே தவிர ஆளுநர் மாளிகை இல்லை.
ஆனால், ஆளுநர் மாளிகையிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. டெல்லியின் ஏஜெண்டாகவே இதுபோல செயல்பட்டு வருகிறார். அதை உணர்ந்து கொண்டே ஜனநாயகத்தைக் காக்க நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்" என்றார்.
தாமதம் ஏன்
தாமதம் குறித்துப் பேசிய அவர், "நேற்றே எங்களை வரச் சொல்லி இருந்தார். ஆனால், நாங்கள் வரத் தாமதம் ஆகிவிட்டது. இதனால் தான் இன்று முடிவை எடுத்தோம். எனவே, காலதாமதத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை.. நாங்கள் வரத் தாமதம் ஆகிவிட்டது அது தான் காரணம்" என்றார்.
ஆட்சியில் பங்கு?
தவெக அரசில் விசிக பங்கு வகிக்குமா என்ற கேள்விக்கு அவர், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கு வேண்டாம்.. வெளியே இருந்து ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளதால் நாங்களும் அந்த முடிவை எடுத்துள்ளோம். அதேநேரம் இது தான் இறுதியான முடிவு என என்னால் சொல்ல முடியாது. இது தற்காலிக முடிவாக இருக்கலாம். எதிர்காலத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்ளலாம். இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்து, எதிர்காலத்தில் நல்ல முடிவை எடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications