தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது தொடர்பாக மாலை 4 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிட உள்ளார். இதனிடையே திருமாவளவனுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தொடர்ச்சியாக பேசி வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் விசிகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையுமா என்ற அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் போராடி வருகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தவெக கூட்டணி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 116ஆக இருக்கிறது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், விசிக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று மாலையே விசிகவின் உயர்நிலைக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்திவிட்டது. இதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தினார். இன்று காலை 10 மணியளவிலேயே விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தது.
ஆனால் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தொடர்ச்சியாக திருமாவளவனுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் கூட பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பிவிட்டு கார்கேவுடன் திருமாவளவன் தனியார் ஹோட்டலில் ஆலோசித்திருந்தார். தற்போது விசிக அலுவலகத்திற்கு புதிய சோஃபாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல் விசிக தொண்டர்களும் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தவெகவினர் திருமாவளவன் என்ன சொல்வார் என்று பரபரப்புடன் காத்திருக்கின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் திடீரென விசிக நிர்வாகிகள், மாலை 4 மணிக்கு திருமாவளவன் முடிவை அறிவிப்பார் என்று அறிவித்துள்ளனர். திருமாவளவன் எடுத்த முடிவை அறிவிக்க தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications