அப்செட்டான விஜய்.. ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. இனி என்ன நடக்கப்போகுதோ!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 3 முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் மெஜாரிட்டி இல்லை என்பதால் ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் தான் ஆளுநருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வுருகிறது. இதற்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது தான் காரணம்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் தவெக மொத்தம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இன்னும் மெஜாரிட்டிக்கு 2 எம்எல்ஏக்கள் தேவை.

இதற்கிடையே தான் விஜய் 3 முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் மெஜாரிட்டி இல்லை என்பதால் விஜய்யை ஆட்சியமைக்க அவர் அழைக்கவில்லை. இது விஜய்யை அப்செட்டாக்கி உள்ளது. இந்நிலையில் தான் அவர் தனிப்பெரும் கட்சி என்பதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார்.
இதுதொடர்பாக தவெக சார்பில் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக உறுப்பினர் என சொல்லும் வழக்கறிஞர் எழிலரசி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. இதனால் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டது.
மெஜாரிட்டி இல்லை என்று ஆட்சியமைக்க அழைப்பு விடாமல் ஆளுநர் தாமதிக்கிறார். எனவே தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்.
சர்க்காரியா ஆணையத்தின் முன்னுரிமை வரிசையை ஆளுநர் பின்பற்ற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு, பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் ஏற்கனவே முறைப்படி உரிமை கோரிய தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகத்துக்கே முதன்மையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அழைப்பு விடுக்கும் முன், முழுமையான பெரும்பான்மைக்கான ஆதாரத்தை கோருவது ஆளுநரின் பணியல்ல.
ஏனென்றால் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபை தான். சட்டசபையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபித்தால் போதும். ஆளுநரிடம் அளிக்கப்படும் பிரமாண பத்திரம் என்பது சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஈடாகாது. 1994 முதல் அனைத்து ஆட்சி அமைக்கும் சர்ச்சைகளிலும் உச்ச நீதிமன்றம் இக்கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவில் அரசியலமைப்பு மரபுகள், சர்க்காரியா ஆணைய பரிந்துரைகள் மற்றும் எஸ்ஆர் பொம்மை - மத்திய அரசு(1994), ஜகத்பீகா பால் - மத்திய அரசு (1999), சந்திரகாந்த் கவ்லேகர் - மத்திய அரசு (2017), ஜி. பரமேஸ்வரா - மத்திய அரசு (2018), சிவராஜ் சிங் சவுகான் - சபாநாயகர், மத்தியப் பிரதேச சட்டசபை (2020) போன்ற வழக்குகளின் வெளியான தீர்ப்புகள் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications