தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து தவறான முடிவு.. விஜய்க்கு தமிழிசை வைத்த அவசரமான வேண்டுகோள்
சென்னை: விஜய் முதல்வர் பதவியேற்பில் சிக்கல் நீடித்து வருவதால் தவெக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு அடுத்தடுத்து தவறான முடிவு எடுத்து வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் பிளேடால் இளைஞர் அறுத்துக்கொண்டுள்ளார்.. வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சம்பவங்களை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை உடனே வெளியிட வேண்டும் என்று தமிழிசை சௌந்திரராஜன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் 108 இடங்களை பெற்ற போதிலும் அவரால் ஆட்சியமைக்க முடியாத நிலை இருக்கிறது. மூன்று முறை ஆளுநரை சந்தித்த போதிலும் போதிய எண்ணிக்கை இல்லை என திருப்பி அனுப்பிப்பட்டுள்ளார். 117 என்கிற மெஜாரிட்டியுடன் போனால் தான் ஆட்சியில் அமர முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். நேற்று விசிக கடிதம் தரும் என்று எதிர்பார்த்த தவெகவினருக்கு அவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அறிவித்தது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில தவெக தொண்டர்கள் அவசரப்பட்டு தவறான முடிவெடுப்பது அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து தவெக தொண்டர்கள் தவறான முடிவெடுப்பதால் கொந்தளிப்பான உணர்ச்சிகரமான சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது.. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது... அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை... மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை...
ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை...உணர்ச்சிபூர்வமாக மாற்றி...பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும் வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்க கூடியதாக இருக்கிறது...உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு திரு விஜய் அவர்கள் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும் ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கு வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!..." இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திராஜன் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், "நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளால் இந்த வீடியோவை நான் பதிவிடுகிறேன்.. தொடர்ந்து முழுமையாக எண்ணிக்கை இல்லாத காரணத்தால், மூன்று முறை விஜய் சந்தித்த பின்னரும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்கிறது.. நீங்கள் எண்ணிகையுடன் வாருங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என்று.. ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழிபோடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.. இத்தனை மதிப்பெண்கள் வாங்கினால் தான், தேர்வாக முடியும் என்று தேர்வு இருக்கும் போது, அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் என்று சொல்வது தவறு.. அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.
அது மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் தனிப்பெரும் கட்சியை நீங்கள் அழைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்கள்.. ஆனால் பின்னால் இருந்து அதற்கு பல முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆக வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லோரும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அதுதான் அரசியல் சூழ்நிலையாக இருக்கிறது.. கம்யூனிஸ்டுகள் ஆதரவை தெரிவித்துவிட்டு, மத்தியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி ஆளுருக்கு அழுத்தம் தருகிறது என்று சொல்கிறார்கள்..
அதில் உண்மை இல்லை.. நான் கேட்கிறேன்.. திருமாவளவன் அவர்களின் ஆதரவுக்காக காத்திருக்கிறோம் என்று (தவெகவினர்) சொல்கிறார்கள்.. இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் நான் ஒட்டுமொத்தமாகத்தான் முடிவெடுப்போம் என்று சொன்ன திருமாவளவன் இன்று ஏன் தயங்குகிறார்.. என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.. ஆக இவர்கள் எல்லாம் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மீது பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.. அதேபோல் தான் காங்கிரஸ்.. இவர்கள் ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக்கழகத்திடம் இருந்து தனத நட்பை முறித்துக் கொண்டு இன்று அவர்களே எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள் என்று எண்ணிக்கை இல்லாமல் ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்கள்.. எல்லாரும் சுயநலத்திற்காக தங்கள் அரசியல் நகர்வை செய்துவிட்டு ஆளுநர் மீதோ, பாரதிய ஜனதா கட்சி மீதோ பழியை சுமத்துவது சரியல்ல.. அதனால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்."இவ்வாறு கூறியிருந்தார்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.














Click it and Unblock the Notifications