விஜய்யிடம் பேரம் பேசும் திருமாவளவன்.. முட்டுக்கட்டை போட்டது ஸ்டாலின்... தமிழிசை வீடியோ
சென்னை: பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திராஜன் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், "நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளால் இந்த வீடியோவை நான் பதிவிடுகிறேன்.. தொடர்ந்து முழுமையாக எண்ணிக்கை இல்லாத காரணத்தால், மூன்று முறை விஜய் சந்தித்த பின்னரும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்கிறது.. நீங்கள் எண்ணிகையுடன் வாருங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என்று.. ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழிபோடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.. இத்தனை மதிப்பெண்கள் வாங்கினால் தான், தேர்வாக முடியும் என்று தேர்வு இருக்கும் போது, அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் என்று சொல்வது தவறு.. அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.
அது மட்டுமல்ல,இன்றைய காலக்கட்டத்தில் தனிப்பெரும் கட்சியை நீங்கள் அழைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்கள்.. ஆனால் பின்னால் இருந்து அதற்கு பல முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆக வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லோரும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அதுதான் அரசியல் சூழ்நிலையாக இருக்கிறது.. கம்யூனிஸ்டுகள் ஆதரவை தெரிவித்துவிட்டு, மத்தியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி ஆளுருக்கு அழுத்தம் தருகிறது என்று சொல்கிறார்கள்..

அதில் உண்மை இல்லை.. நான் கேட்கிறேன்.. திருமாவளவன் அவர்களின் ஆதரவுக்காக காத்திருக்கிறோம் என்று (தவெகவினர்) சொல்கிறார்கள்.. இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் நான் ஒட்டுமொத்தமாகத்தான் முடிவெடுப்போம் என்று சொன்ன திருமாவளவன் இன்று ஏன் தயங்குகிறார்.. என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.. ஆக இவர்கள் எல்லாம் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மீது பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை..
அதேபோல் தான் காங்கிரஸ்.. இவர்கள் ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக்கழகத்திடம் இருந்து தனத நட்பை முறித்துக் கொண்டு இன்று அவர்களே எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள் என்று எண்ணிக்கை இல்லாமல் ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்கள்.. எல்லாரும் சுயநலத்திற்காக தங்கள் அரசியல் நகர்வை செய்துவிட்டு ஆளுநர் மீதோ , பாரதிய ஜனதா கட்சி மீதோ பழியை சுமத்துவது சரியல்ல.. அதனால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்."இவ்வாறு கூறியுள்ளார்.
இன்றைய அரசியல் சூழல் ஒரு விளக்கம்!... pic.twitter.com/dqIT9HVQY1
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 9, 2026
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய் இதுவரை மூன்று முறை போய், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டார். ஒவ்வொரு முறையும் எம்எல்ஏக்கள் ஆதரவு குறைவாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பி வருகிறார். 118 எம்எல்ஏக்களை தன் முன்னே நிரூபித்தால் மட்டுமே பதிவியேற்க அனுமதி அளிக்க முடியும் என்று கூறி வருகிறார். இந்த சூழலில் முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்கச் சொல்லியிருக்க வேண்டும். அவரிடம் பெரும்பான்மைக்குத் தேவையான அந்த 'மேஜிக் நம்பரை' விட 10 இடங்கள் குறைவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த கட்சியின் தலைவரைத்தான் கவர்னர் முதலில் அழைக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்ட விதிமுறை. அவருக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து, தனது ஆதரவைத் திரட்டி ஒரு நிலையான ஆட்சியை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.
சில நேரங்களில் வாய்ப்பு கொடுக்கப்படும்போது அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறுவதும் உண்டு; சில நேரங்களில் நிரூபித்துக் காட்டுவதும் உண்டு. சிறுபான்மை அரசுகளும் கூட சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணம், மக்களவையில் நீண்ட காலம் நீடித்த நரசிம்ம ராவ் அரசு.
இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால், 118 பேர் ஆதரவு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலம் கவர்னரே ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார். சட்டமன்றம் செய்ய வேண்டிய வேலையை அவர் கையில் எடுக்கிறார். இது முற்றிலும் தவறானது" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications