சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கருணாநிதி சமாதி அருகே தூத்துக்குடி வாலிபர் செயலால் ஆடிப்போன போலீஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி உள்ளது. நேற்று மாலை, அந்த பகுதியில் மர்ம வாலிபர் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் திடீரென செய்த காரியம் போலீஸாரை ஆடிப்போக வைத்துள்ளது. அவர் என்ன செய்தார்.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளது. சென்னை மெரினா கடற்கரை என்பது உலகப்புகழ் பெற்ற நீண்ட கடற்கரையை கொண்ட சுற்றுலா தலம் ஆகும். அண்ணா சதுக்கம் தொடங்கி, பட்டினப்பாக்கம் வரை சுமார் 5 கிமீ தூரத்திற்கு நீண்ட கடற்கரை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், சென்னை மக்களும் வந்து செல்வார்கள். பலர் குடும்பம் குடும்பமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது. அதேநேரம் சிலர் அங்கு குடித்துவிட்டு சேட்டைகள் செய்வதும் அடிக்கடி நடக்கிறது.

நேற்று மாலை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி பகுதியில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் திடீரென, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் உள்ள திரியில் தீ வைத்தார். அவரை பார்த்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதற்குள் தீ வைத்த மண்ணெண்ணெய் பாட்டிலை அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆனால், அந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய் தீ பிடித்து பெரிய அளவில் எரியவில்லை. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்று அண்ணா சதுக்கம் போலீசார், மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் முழு போதையில் இருந்தார். அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் முத்துச்செல்வன் என்றும் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அப்போது தெரிவித்தனர். போதையில் இருந்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்த முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது, போதை தெளிந்த பிறகு தீவிர விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications