வெள்ளத்தில் இமாச்சல் - உத்தரகாண்ட்! அதிகனமழை + நிலச்சரிவால் 18 பேர் பலி.. இன்றும் வார்னிங்
போபால்: இமாச்சல பிரேதசம் மற்றும் உத்தரகாண்ட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் இருமாநிலங்களின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இருமாநிலங்களிலும் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது மேகவெடிப்பும் நிகழ்கிறது. இதனால் குறைந்த நிமிடங்களி்ல அதிகப்படியான மழை கொட்டி தீர்க்கிறது.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாபோவன், சஹஸ்டிரஸ்தாரா மற்றும் ஐடி பார்க் உள்ளிட்ட இடங்களில் வீடு, கடைகள் தண்ணீரில் மூழ்கின. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
உத்தர காண்டில் 15 பேர் பலி
உத்தரகாண்டில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். 16 பேர் மாயமாகி உள்ளனர். சாலைகளை வெள்ளம் அடித்து சென்றது, சாலைகளில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளத்தால் 900க்கும் அதிகமானவர்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றும் கனமழை வாய்ப்பு
உத்ராஞ்சல் பல்கலைக்கழகம் அருகே பிரேம் நகரில் உள்ள மேம்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. டெலிபோன் வயர்கள் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட் இன்று வரை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டை எடுத்து கொண்டால் செப்டம்பர் 1ம் தேதி முதல் நேற்று வரை 16 நாட்களில் சராசரி மழை அளவு 1,109.8 மில்லி மீட்டராக உள்ளது. ஆனால் இந்த முறை மொத்தம் 1,375.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த 24 சதவீத அதிக மழை என்பது அங்கு பாதிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இமாச்சலில் நிலச்சரிவு - வெள்ளம்
அதேபோல், இமாச்சல பிரதேசத்தையும் கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, கனமழை பெய்து வருகிறது. மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். மாண்டி பகுதியில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது.
பல வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. 45 பேர் மாயமாகி உள்ளனர். 477 பேர் காயமடைந்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை இமாச்சல பிரேதசத்தில் வழக்கத்தை விட 46 சதவீத அளவுக்கு மழை அதிகரம் பெய்துள்ளது.
46 மேகவெடிப்புகள்
இந்நிலையில் தான், இன்றும் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இதனால், இமாச்சல பிரதேசத்தில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, மேகவெடிப்பு விவகாரம் தான் இமாச்சல பிரதேசத்துக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்போது வரை 46 மேகவெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. 97 முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 140 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications