Jabalpur Boat Tragedy: ஜபல்பூர் படகு விபத்து! 2 குழந்தைகளின் சடலம் மீட்பு! பலி எண்ணிக்கை 11-ஆனது
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் படகு விபத்தில் மேலும் இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு அருகிலுள்ள நர்மதா ஆற்றின் பர்கி அணையில், சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான படகு கவிழ்ந்த விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.

சுமார் 39 பயணிகள் மற்றும் இரு படகு ஊழியர்கள் என 41 பேர் பயணித்த இந்தப் படகு, ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த இயற்கை அழகை ரசித்தபடியும் சிரிப்பலைகளுடன் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் மாலை 6 மணியளவில் வானிலை மோசமாக மாறி, மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் நிலைத்தடுமாறிய படகு அந்த ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் முக்குளிப்பாளர்கள் (Divers) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும், சேறு படிந்த பகுதிகள் இருப்பதாலும் தேடுதல் பணியில் சவால்கள் நீடிக்கின்றன. இதனால், தேடுதல் எல்லையை விபத்து நடந்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிற்கு மீட்புப் குழுவினர் விரிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் இரு குழந்தைகளின் உடல்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 4 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், "மாயமானவர்களைக் கண்டுபிடிக்க அனைத்து நவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆற்றில் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு தேடுதல் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன," எனத் தெரிவித்தனர்.
சுற்றுலாத் தலங்களில் இயக்கப்படும் படகுகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததா? அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோகமான சம்பவம் ஜபல்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாயமானவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என அவர்களது உறவினர்கள் ஆற்றங்கரையில் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முதல் வீடியோ வெளியான நிலையில் படகு மூழ்கும் போது அதில் ஆற்று நீர் உள்ளே வந்துக் கொண்டிருந்த போதுதான் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அவர்கலுக்கு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.
இந்த படகு விபத்தில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போல் ஒரு தாய்- மகன் கட்டி அணைத்தபடியே இறந்துள்ள சம்பவமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications